பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற தாக்குதலை இந்தியா மேற்கொண்டு வரும் நிலையில், பாகிஸ்தானுக்குள் தெற்கு Waziristan பகுதியில் பயங்கர தாக்குதல் ஒன்று நடந்துள்ளது.
தீவிரவாத அமைப்பான தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் செய்த தாக்குதலில் 20 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இது இன்று அதிகாலை ஷகாய் பிரிவில் உள்ள டன்கேட் ராணுவ முகாமில் நடைபெற்றது. முதற்கட்டமாக லேசர் ரைஃபிள்கள் பயன்படுத்தப்பட்டு 6 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் தீவிரமான தாக்குதலாக இது மாறியது.
இந்த தாக்குதல் குறித்து கேள்விப்பட்டு மான்டொய் பகுதியில் இருந்து உதவிக்கு வந்த ராணுவ கமாண்டர்கள் வழியிலேயே தாக்கப்பட்டதாகவும், அதில் இரண்டு ராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டன என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தெஹ்ரீக்-இ-தாலிபான் தரப்பினர், தாங்கள் 20 பாகிஸ்தான் ராணுவ வீரர்களை கொன்றதாகவும், 5 பேரை காயப்படுத்தியதாகவும் தெரிவித்தனர். மேலும், அவர்கள் 5 ரைஃபிள்கள், ஒரு ராக்கெட் லாஞ்சர், நைட் விஷன் சாதனங்கள் மற்றும் பல ராணுவப் பொருட்களை கைப்பற்றியதாக கூறியுள்ளனர்.
இது பாகிஸ்தான் ராணுவம் சமீபத்தில் ஷவால் பகுதியில் நடத்திய தாக்குதலுக்கான பழிவாங்கல் என தெஹ்ரீக்-இ-தாலிபான் தெரிவித்துள்ளது. தாக்குதலில் “முஸப்” என்ற போராளி உயிரிழந்ததாகவும், அவருக்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறினர். மேலும், “இது முஸ்லீம் மக்களின் இதயத்துக்கு ஆறுதல் அளிக்கத்தான் மேற்கொள்ளப்பட்டது” எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே பலுசிஸ்தான் விடுதலைப்படை என்ற அமைப்பும் பாகிஸ்தான் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்கி வருகின்றன. எனவே தெஹ்ரீக்-இ-தாலிபான், பலுசிஸ்தான் விடுதலைப்படை இரண்டு உள்நாட்டு அழுத்தத்தையும் இந்தியாவின் அழுத்தத்தையும் ஒரே நேரத்தில் சந்தித்து வரும் பாகிஸ்தான் தற்போது நிலைகுலைந்து உள்ளது. எந்த நேரத்திலும் பாகிஸ்தான் அதிபர் மற்றும் பிற தலைவர்கள் நாட்டில் இருந்து தப்பியோட வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது.