பக்தர்களின் வெள்ளத்தில் வைகை ஆற்றில் பச்சைப்பட்டு கள்ளழகர்..! உடை தேர்வானது எப்படி?

  மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. மீனாட்சி திருக்கல்யாணம் கடந்த ஏப்ரல் 28ம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. தொடர்ந்து நேற்று இரவு முழுவதும் கள்ளழகர் எதிர்சேவை தல்லாகுளத்தில்…

 

மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. மீனாட்சி திருக்கல்யாணம் கடந்த ஏப்ரல் 28ம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. தொடர்ந்து நேற்று இரவு முழுவதும் கள்ளழகர் எதிர்சேவை தல்லாகுளத்தில் இனிதே நடந்தது.

இன்று அதிகாலை 5.50 மணியளவில் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவம் இனிதே நடைபெற்றது. தங்கக்குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டு உடுத்தி அழகர் இறங்கியதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். ”அரோகரா” கோஷம் முழங்க அவர்கள் அழகரை வரவேற்றது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.

பச்சைப்பட்டு என்றால் இந்த ஆண்டு முழுவதும் செழிப்பைத் தரும் என்பதால் பக்தர்கள் உற்சாக வெள்ளத்தில் அழகரைக் கண்டு வருகின்றனர். வீரராகவப் பெருமான் வெள்ளைக் குதிரையில் வைகை ஆற்றில் நின்று அழகரை வரவேற்றார். இந்தப் பச்சைப்பட்டை எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள் என்று தெரியுமா?

பொதுவாக அழகர் மஞ்சள் பட்டு உடுத்தினால் மங்களகரமான நிகழ்வுகள் அதிகம் நடக்குமாம். பச்சைப்பட்டு என்றால் செழிப்பாக இருக்குமாம். வெள்ளைஇ ஊதாப்பட்டு என்றால் நாடு வளர்ச்சி இன்றி சரிவை சந்திக்குமாம். சிவப்பு பட்டு என்றால் விவசாயத்தில் போதிய விளைச்சல் இருக்காதாம்.

கள்ளழகருக்கான ஆடை, அணிகலன்கள் எல்லாம் ஒரு மரப்பெட்டியில் வைப்பார்கள். கோவிலின் தலைமை பட்டாச்சாரியார் கண்களை மூடியபடி பெட்டிக்குள் கையை விட்டு ஒரு ஆடையை எடுப்பார்கள். அதுதான் கள்ளழகருக்கான பட்டு. இப்படித்தான் தேர்வு செய்வார்கள்.