பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்கு பின்னர், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா அஸிஃப் திடீர் பல்டி அடித்து அமைதிப்பேச்சுக்கு ஒத்துழைப்பதாக கூறியுள்ளார்.
‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்கு முன்பு, “நாங்கள் உயிருடன் இல்லை என்ற நிலை வந்தால் உலகில் எவரும் உயிரோடிருக்க முடியாது என்று கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்த அவர், தற்பொழுது, “இந்தியா தாக்குதலை நிறுத்தினால், நாங்களும் தாக்குதலை நிறுத்த தயாராக இருக்கிறோம்” என்று ஒரு பாகிஸ்தானிய செய்தி சேனலுக்கு தெரிவித்தார்.
இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், பாகிஸ்தானின் பஞ்சாப் மற்றும் பாக்-ஆக்கிரமித்த காஷ்மீரில் உள்ள மொத்தம் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்கியது.
தாக்கப்பட்ட இடங்களில் முஸாபராபாத், கோட்லி, சியால்கோட், பர்னாலா, பஹவல்பூர் ஆகியவை அடங்கும். இவை எல்லாம் லஷ்கர்-ஈ-தய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன், ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளால் இந்திய எல்லைக்குள் நுழைவதற்கான முகாம்களாக பயன்படுத்தப்பட்டன.
இந்த தாக்குதல் குறித்து பத்திரிகையாளர்களிடம் விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் கர்னல் சோஃபியா குரேஷி, வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் கூறியபோது “இந்த தாக்குதல்கள் பயங்கரவாத முகாம்களை மட்டும் குறிவைத்து செய்யப்பட்டது. பாகிஸ்தான் இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் இல்லை. பொதுமக்கள் உயிரிழப்பும் இல்லை,” என்று தெரிவித்தனர்.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் இந்தியாவை “இஸ்ரேல்-காசா போர்” போன்று ஒப்பிட்டு பேசிய நிலையில் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் தற்போது அமைதியை விரும்புகிறது என்று வெள்ளை கொடியை பறக்கவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.