பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரிலும் உள்ள தீவிரவாத முகாம்களை இந்தியா குறிவைத்து தாக்கிய சில மணி நேரங்களில், இந்திய அரசு மிக கடும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதுதான் “திருந்துங்கள், இல்லையெனில் தண்டிக்கப்படுவீர்கள்”.
அரசு வட்டாரங்கள் இதுகுறித்து கூறிய போது “பாகிஸ்தானில் இன்னும் பல தீவிரவாத முகாம்கள் நம் கண்காணிப்பில் உள்ளன. அவர்கள் எதாவது பதிலடி கொடுக்க முயன்றால், இந்தியா தயக்கமின்றி உரிய பதிலடி கொடுக்கும்.
“தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியா அச்சப்படவில்லை. தேவைப்பட்டால் பாகிஸ்தானுக்கு மீண்டும் பாடம் கற்றுத்தர இந்தியா தயாராக உள்ளது,” எனவும் இந்தியா கூறியுள்ளது.
ஏப்ரல் 22-ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்னும் ராணுவ நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத இலக்குகளை ஏவுகணைகள் மூலம் தாக்கியுள்ளது. இதில் ஜெய்ஷ்-எ-முகம்மத் அமைப்பின் பஹாவல்பூர் முகாமும், லஷ்கர்-இ-தொய்பாவின் முரித்கே முகாமும் அடங்கும்.
இந்த தாக்குதல் திட்டமிட்டு, மிக சரியாக மேற்கொள்ளப்பட்டது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். “இந்தியாவின் நிலப்பரப்பில் நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நம் உரிமையை பயன்படுத்தியுள்ளோம். நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் பரிசீலனையுடன், பொறுப்புடனும் மேற்கொள்ளப்படுகிறது,” என்றார்.
“எங்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை மட்டுமே நாங்கள் குறிவைத்து தாக்கியுள்ளோம். தீவிரவாதிகளின் நம்பிக்கையை உடைக்கும் நோக்கத்திலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களின் முகாம்களும் கட்டிடங்களுமே இலக்குகளாக இருந்தன,” எனவும் அவர் தெரிவித்தார்.
தாக்குதலுக்குப் பிறகு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது: “ஏப்ரல் 22 தாக்குதலுக்கு பின், பாகிஸ்தானில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தாக்குதல்களை தடுக்கும் வகையில், பொறுப்புடன் செயல்பட்டு, திட்டமிட்டு, சரியான தாக்குதலை இந்தியா நடத்தியது.” என்றார்.