இந்தியாவின் குஜராத் கடற்கரையை ஒட்டிய பகுதியில், இந்தியக் கடற்படை முக்கியமான பயிற்சிகளை நடத்தவுள்ளதாக அறிவித்து பயிற்சி எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதேபோல் பாகிஸ்தானும் அரபிக்கடலில் கடற்படை பயிற்சி நடத்தி வருகிறது.
இந்தியா பயிற்சி இடம், இந்தியாவின் ‘தனிச்சிறப்பு பொருளாதார மண்டலம்’ பகுதியில் அமைந்துள்ளது. பாகிஸ்தான் பயிற்சி நடத்தும் பகுதியிலிருந்து வெறும் 85 கடல் மைல்கள் தூரத்தில் இந்த இடம் உள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் பாகிஸ்தானும் முன்னெச்சரிக்கையாக பயிற்சி நடத்தி வருகிறது.
சமூக ஊடகங்களில் பாதுகாப்பு தகவல்களை பகிரும் டேமியன் சைமன் என்பவர் கூறிய தகவல்படி இந்தியாவின் பயிற்சி அறிவிப்புகள் ஏப்ரல் 30 முதல் மே 3 வரை இருக்க, பாகிஸ்தானின் அறிவிப்புகள் ஏப்ரல் 30 முதல் மே 2 வரை இருந்தன.
இது ஒரு பொதுத் தகவல் என்றும் கடற்படை ராக்கெட் அல்லது ஆயுத பயிற்சி நடக்கும் பகுதியில், கப்பல்கள், விமானங்கள் உள்ளிட்ட வர்த்தக போக்குவரத்துகள் செயல்படாமல், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக வெளியிடப்படுகிறது என இந்திய கப்பல் படை தெரிவித்துள்ளது.
இதுவரை பாகிஸ்தான் தனது அறிவிப்புகளில் ஏதும் ஏவுகணைகள் செலுத்தவில்லை. ஆனால் இந்தியா, சமீப காலங்களில் பல சிறு கப்பல்களை குறிவைக்கும் ஏவுகணை பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது. நேற்று, கடற்படை வெளியிட்ட ஒரு செய்தியில், எந்த தொலைவாக இருந்தாலும் எங்களால் தாக்க முடியும் என கூறியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சக தகவல்களை மேற்கோள் காட்டி ANI செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, குஜராத் கடற்கரையை ஒட்டிய கடல் நிலைகளில் இந்தியக் கடல் காவல் படை போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் அரபிக்கடலில் அடுத்தடுத்து பயிற்சி பெற்று வருவது அந்த பகுதியில் பதட்டத்தை அதிகரித்துள்ளது.