அக்ஷய திரிதியை முன்னிட்டு, சுவிகி இன்ஸ்டா மார்ட் புதுமையான சேவையை செய்துள்ளது. காய்கறி, மளிகைப் பொருட்கள் போலவே, தங்கமும் வெள்ளியும் வீடுதேடி டெலிவரி செய்துள்ளது. இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சமீபத்தில் இணையத்தில் வைரலாகிய ஒரு வீடியோவில், சுவிகி டெலிவரி செய்பவர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வதை காணலாம். அவருடன் பின்னால் பாதுகாப்பாளர் ஒருவர் இருப்பதும், அவர் ஒரு தங்கக் கேபினை தன்னுடன் தூக்கிக்கொண்டு செல்லும் காட்சியும் இணையத்தை ஆச்சரியப்படுத்தியது. பாதுகாப்பாளரின் கையில் கம்பியும், மற்றொரு கையில் பாதுகாப்பு பெட்டியும் இருக்கிறது.
இதனைக் கண்ட ஒருவர் “இது என்ன நடக்கிறது?” என கேட்டுள்ளாா். அதற்கு சுவிகி இன்ஸ்டா மார்ட் நகைச்சுவையாக, “உண்மையான தங்கத்துக்கு தேவையான உண்மையான பாதுகாப்பு தானே, பிரோ!” என பதிலளித்துள்ளது.
இந்த பிரச்சாரத்தை மேலும் ஊக்குவிக்க, சுவிகி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரல் வீடியோக்களை பகிர்ந்துள்ளது. மேலும் “தங்கமா? உண்மையா?” என மற்றொரு நெட்டிசன் கேட்டதற்கும், இனி தங்கம் டெலிவரியும் உண்டு என சுவிகி பதிலளித்தது.
சுவிகி இன்ஸ்டாமார்ட் வெளியிட்ட அறிக்கையில், அக்ஷய திரிதியை முன்னிட்டு கல்யாண் ஜுவல்லெர்ஸுடன் இணைந்து, 0.5 கிராம் மற்றும் 1 கிராம் தங்க நாணயங்கள், 5, 10 மற்றும் 20 கிராம் வெள்ளி நாணயங்களை சில நிமிடங்களில் வீடு தேடி தருகிறோம் என தெரிவித்துள்ளது. இந்நாணயங்கள் ஹால்மார்க் சான்றளிக்கப்பட்டவை மற்றும் அழகான வடிவமைப்புடன் வருகிறது.
“வாடிக்கையாளர்கள் தங்கள் பண்டிகை தேவைகளுக்காகவும், பாரம்பரிய பொருட்களுக்காகவும் இப்போது வேகமான டெலிவரி சேவையை விரும்புகிறார்கள். அந்த வகையில் இது சரியான தருணத்தில் ஏற்படுத்தப்பட்ட கூட்டாண்மை,” என சுவிகி இன்ஸ்டா மார்ட் சிஇஓ அமிதேஷ் ஜா கூறினார்.
அக்ஷய திரிதியை முன்னிட்டு மட்டுமின்றி நாள் முழுவதும் தங்கம், வெள்ளி டெலிவரி செய்யும் திட்டம் இருப்பதாகவும், விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் சுவிகி தெரிவித்துள்ளது.
https://www.instagram.com/reel/DJD7AiWKW2x/?utm_source=ig_web_button_share_sheet