பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு கோரிய பொதுநல வழக்கை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்தது. இந்த வழக்கை தாக்கல் செய்தவர்கள், இவ்வளவு முக்கியமான நேரத்தில் “சரியான பொறுப்புடன் நடக்கவில்லை” என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
பெஹல்காமில் 26 பேர் உயிரிழந்த இந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிய வழக்கை, நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் என். கே. சிங் அமர்வு இன்று விசாரணை செய்தது.
இந்த நேரம் மக்கள் அனைவரும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படும் நேரம். இப்படி மனுக்கள் தாக்கல் செய்வது பாதுகாப்புப் படைகளை மனச்சோர்வுக்கு உள்ளாக்கும். நாங்கள் விசாரணை நிபுணர்கள் அல்ல. ஓய்வுபெற்ற நீதிபதியிடம் விசாரணை செய்யுமாறு கூறுவது சரியானது அல்ல,” என நீதிபதி சூர்யகாந்த் கூறினார்.
“இந்த நேரம் முக்கியமானது. இது பாதுகாப்புப் படைகளை பின்னுக்கு தள்ளும் வழி அல்ல. நீதிமன்றங்களை இவ்வாறான விசாரணைகளில் இழுக்க வேண்டாம்,” என்று நீதிபதிகள் எச்சரிக்கை தெரிவித்தனர்.
இந்த வழக்கை தாக்கல் செய்தவர்கள் காஷ்மீர் பகுதியை சேர்ந்த ஜுனைத் முகமது ஜுனைத், வழக்கறிஞர்கள் ஃபதேஷ் குமார் சாஹூ மற்றும் விக்கி குமார் ஆவர். இவர்கள் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும் என்றும், சுற்றுலா பகுதிகளில் பாதுகாப்பு திட்டம் உருவாக்க வேண்டும் என்றும் கோரி மனு தாக்கல் செய்தனர்.