இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றாம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று டெல்லியில் உயர் மட்ட கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்திய இராணுவம், கடற்படை, விமானப்படை தலைவர்கள், தலைமை பாதுகாப்புத் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். பாகிஸ்தானுக்கு அடுத்த பதிலடி குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான தற்போதைய நிலையை விரிவாக கண்காணித்து வருகிறோம் என பாகிஸ்தானுக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் ஜேன் மரியட் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை குறைப்பதற்காக, சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர் இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் உரையாடியுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் தொடரும் நிலையில், மே 14ஆம் தேதி வரை காஷ்மீரிலிருந்து ஹஜ் பயணிகளுக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர் விமானநிலையம் மற்றும் இராணுவ தலைமையகத்திற்கு அருகில் இரண்டு பெரும் வெடிகுண்டுகள் வெடித்த சத்தம் கேட்கப்பட்டதாக அதிகாரிகள், ராய்ட்டர்ஸ் செய்தியாளர் மற்றும் சில பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 5 மணியளவில், பாகிஸ்தான் பைக்கர் YIHA III வகை காமிகாஸி டிரோன்களை அமிர்தசரஸை நோக்கி அனுப்பியது. மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளை தாக்கும் முயற்சி இது. இந்திய விமானப்படை பாதுகாப்பு பிரிவு உடனடியாக அவற்றை கண்டறிந்து அழித்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
அவந்திப்போரா, பதான்கோட் உள்ளிட்ட பகுதிகளில் விமான நிலையங்களின் அருகிலும் பல இடங்களிலும் சந்தேகத்திற்கிடமான டிரோன் இயக்கங்கள் பார்த்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் தொலைபேசியில் பேசினார். பதற்றத்தை குறைக்க இரு நாடுகளும் நேரடி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும், அமெரிக்கா தேவையான இடத்தில் துணைபுரிய தயாராக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் இன்று காலை CDS ஜெனரல் அனில் சவான் முக்கிய விடயங்களை விளக்கிக் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.