ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட பிறகு, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், “இந்தியா பாகிஸ்தானை தாக்கும் துணிச்சல் காட்டினால், மற்றும் பாகிஸ்தானின் நிலைத்தன்மை பாதிக்கப்படும் நிலை வந்தால், இந்த உலகில் யாரும் உயிரோடு இருக்க முடியாது,” என அசிப் கூர்ந்துள்ளார்.
அத்துடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாலஸ்தீனில் நடத்தும் தாக்குதலுக்கு ஒத்த மனப்பான்மைதான் இந்தியா காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் வாழ வேண்டும், இல்லை என்றால் யாரும் வாழக்கூடாது என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, பாதுகாப்பு அமைச்சர் அசிப், இந்தியா எப்போது வேண்டுமானாலும் லைன் ஆஃப் கன்ட்ரோல் பகுதியில் தாக்குதல் நடத்தலாம் என கூறியிருந்தார். “இந்தியா எந்த இடத்தில் வேண்டுமானாலும் தாக்கலாம் என்பதற்கான தகவல்கள் உள்ளன. நாங்கள் அதை ஒப்புக்கொள்ள முடியாது. பதிலடி கொடுக்கப்படும்,” என இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப், பெஹல்காம் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். “இந்த தாக்குதலுக்குப் பின்னால் இந்தியா அல்லது வேறு குழுக்கள் இருந்ததா என்பதை கண்டுபிடிக்க இந்த விசாரணை உதவும். இந்தியாவின் ஆதாரமில்லா குற்றச்சாட்டுகள் ஏற்க முடியாது,” என்றார்.
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ், பாகிஸ்தான் பெற வேண்டிய நீரை இந்தியா நிறுத்த முயற்சித்தால், இந்தியா அமைக்கும் எந்த கட்டுமானத்தையும் அழிக்க தயார் எனவும், அதற்காக முழு அளவிலான போரை நடத்த தயாராக இருப்பதாகவும் அசிப் கூறியிருந்தார்.
இந்த மிரட்டல்களுக்கு பதிலளித்த பாஜகவின் தேசிய பேச்சாளர் ஷானவாஸ் ஹூசேன் கூறியதாவது: “கவாஜா ஆசிப் பயத்துடன் இருப்பது வெளிப்படையாக தெரிகிறது. அவர் பாதுகாப்பு அமைச்சர் என்றாலும், அவர் பேச்சு தவிர வேறு அதிகாரம் ஏதும் இல்லை. பாகிஸ்தானில் மக்கள் தினமும் பயத்துடன் இருக்கிறார்கள். தூக்கமே கெட்டுவிட்டது.” என்று கூறினார்.