இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பின்னர், இந்திய அரசு பயங்கரவாதத்தை கடுமையாக எதிர்க்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்க காங்கிரஸில் நடந்த ஒரு நிகழ்வில் பேசும் போது, மைக் ஜான்சன் கூறியதாவது: ’இந்தியா, பாகிஸ்தானில் என்ன நடக்கிறது என்பதை பற்றி நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம். நம்முடைய உறவு நாடுகளுடன் நாம் இருப்பது முக்கியம். இந்தியா எங்கள் முக்கிய கூட்டாளியாக உள்ளது. இந்தியா, பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியாக நிற்க வேண்டும். இந்நிலையில், அமெரிக்கா, இந்தியாவின் முயற்சிகளை முழுமையாக ஆதரிக்கும்.”
“இந்த உறவு வளர்வதற்கேற்ப, அமெரிக்கா இதற்காக தேவையான ஆதரவை, நேரத்தையும், வளங்களையும் ஒதுக்கும். டிரம்ப் நிர்வாகம் இந்த உறவின் முக்கியத்துவத்தையும் பயங்கரவாதத்தின் அபாயத்தையும் நன்கு புரிந்திருக்கிறது. பயங்கரவாதத்தின் அபாயம் அதிகரித்தால், டிரம்ப் நிர்வாகம் அதிக கவனம் செலுத்தும் என நம்புகிறோம்.”
ஏற்கனவே ஏப்ரல் 23ஆம் தேதி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது அனுதாபங்களை தெரிவித்தார். மேலும் பயங்கரவாதத்திற்கு எதிராக நீங்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு எனது முழு ஆதரவு என தெரிவித்ததாக செய்திகள் வெளியானது. இப்போது அமெரிக்கா அதிகாரபூர்வமாக இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து பாகிஸ்தான் நொறுங்கி போயுள்ளது.