பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றங்களை பேச, ஐநா பாதுகாப்பு கவுன்சில் நேற்று இரவு கூட்டம் நடத்தியது. இந்த கூட்டம் பாகிஸ்தான் கோரிக்கையின் பேரில் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், ஐநா அனுபவமுள்ள முன்னாள் தூதரும், தற்போதைய காங்கிரஸ் எம்பியுமான சசிதரூர், இந்த கூட்டத்தில் இருந்து எந்த முக்கிய முடிவும் வராது என்பதே உண்ஐ என்று கூறியுள்ளார்.
ஐநாவில் நீண்ட காலம் பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் பேசிய அவர், “இந்தியாவை எதிர்த்து எந்தவித தீர்மானமும் கொண்டு வர முடியாது; ஏனெனில் பல நாடுகள் அதற்கு எதிராக வாக்களிக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல், பாகிஸ்தானை விமர்சிக்கும் தீர்மானத்தையும் சீனா வீட்டோ செய்யும். எனவே, பாதுகாப்பு கவுன்சிலில் பயங்கரவாதத்தை பற்றிய பொது கவலையையும் தெரிவிக்கும் விதமான கருத்துரையே வெளிவரும்” என்றார்.
ஐநா கூட்டத்தில் உலக நாடுகள், பாகிஸ்தானிடம் கடுமையான கேள்விகள் எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத குழுவின் தொடர்பு, தொடக்கத்தில் தாக்குதலுக்கு அவர்களது பொறுப்பு ஏற்கும் அறிக்கை, அதன்பின் மறுப்பு, மத அடிப்படையில் சுற்றுலா பயணிகளை தாக்கியது, அணு ஆயுதங்களை குறித்து தொடர்ந்து பேசுவது போன்றவை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
இவ்வாறு கடும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதால், பாகிஸ்தான் எதிர்பார்த்த ஆதரவு அவர்களுக்கு கிடைக்கவில்லை. பல நாடுகள் பயங்கரவாதம் குறித்து உண்மையான கவலையை வெளிப்படுத்தியுள்ளன. இந்தியா காட்டிய எதிர்வினைக்கும் அது காரணம்” என்று சசிதரூர் தெரிவித்துள்ளார்.