தற்போது திமுக கூட்டணியில் பாமக இணைய ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. பாமக, திருவண்ணாமலை, வேலூர், கடலூர், தர்மபுரி போன்ற மாவட்டங்களில் செல்வாக்கு பெற்ற கட்சியாக இருப்பதால், பாமக இணைந்தால் கூடுதல் வாக்கு சதவீதம் கிடைக்கும் என திமுக கணக்கிடுகிறது.
இதையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “திமுகவையே நம்பியுள்ளோம் என்பது தவறு. தேர்தல் அரசியலில் எப்படியும் நாங்கள் முடிவு எடுப்போம்,” எனக் கூறியுள்ளார்.
விஜய் கூட்டணிக்கு அதிக வாய்ப்பு?
திமுக கூட்டணியில் பாமக இணைந்தால் விடுதலை சிறுத்தைகள் வெளியேறலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால், விடுதலைச் சிறுத்தைகள் அந்த அணியில் சேர வாய்ப்பு குறைவு. எனவே, அந்தக் கட்சிக்கு விஜய் தலைமையிலான கூட்டணியே ஒரே விருப்பமாகும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன?
விசிகவை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியும் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காவிடில் திமுக கூட்டணியை விட்டு விலகும் வாய்ப்பு அதிகம். அந்தக் கட்சியும் விஜய் கூட்டணியில் இணையலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்றாவது அணி உருவாகிறதா?
இந்த சூழலில், தமிழக வெற்றி கழகம், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் மற்றும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்தால், அதிமுக, திமுக கூட்டணிகளை எதிர்த்து வலிமையான மூன்றாவது அணி உருவாகும் எனக் கூறப்படுகிறது. மேலும், திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி மற்றும் அவரது கட்சி எம்எல்ஏக்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கும் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
50 ஆண்டுகளில் முதல் முறையாக மாற்றம்?
இந்த மூன்றாவது அணியில் அனைத்து முக்கிய கட்சிகளும் இணைந்தால், தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக-அதிமுக இல்லாத ஆட்சி உருவாகும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆனால், இவை அனைத்தும் தற்போதைய கணிப்புகளாகவே உள்ளன. உண்மையில் இது நடைமுறைக்கு வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.