LIC நிறுவனம் குறித்து கடந்த சில ஆண்டுகளாக நெகட்டிவ் கருத்துக்களே வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது இந்நிறுவனத்திற்கு திடீரென கோடி கணக்கில் லாபம் கிடைத்துள்ளதாக கூறப்படுவதை அடுத்து LIC பங்குகள் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் கடந்த வியாழன் அன்று கிட்டத்தட்ட மூன்று சதவீதம் அதிகரித்துள்ளதை அடுத்து தான் LIC நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது LIC நிறுவனம் இந்துஸ்தான் நிறுவனத்தின் 27.49 லட்சம் பங்குகளை வைத்துள்ளது தான் இதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் பங்குகள், கடந்த வியாழனன்று ரூ24.20 என்ற நிலையைத் தொட்டன. இண்ட்ரா டே வர்த்தகத்தில் 3% க்கும் அதிகமாக உயர்ந்த பங்கு, BSE யில் வலுவான வர்த்தகத்தை பதிவு செய்தது. புனித வெள்ளி காரணமாக சந்தை மூடப்பட்டிருந்த நிலையில், அடுத்த வர்த்தக நாளான இன்று மிகப்பெரிய அளவில் இந்த பங்கு உயரும் என சந்தை பயனாளர்கள் காத்திருக்கின்றனர்.
2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் LIC சுமார் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் 1.3% பங்குகளை வைத்திருக்கிறது. இது 27.49 லட்சம் பங்குகள் ஆகும். LIC போன்ற முக்கிய நிறுவன முதலீட்டாளர்கள் பங்குக்களை கொள்வதால், சிறு முதலீட்டாளர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பங்குசந்தை உற்சாகத்தை மேலும் தூண்டும் வகையில், ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் தனது வரலாற்று சிறப்புமிக்க அம்பாசிடர் காரை எலக்ட்ரிக் வடிவில் மீண்டும் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. சமீபத்தில் இந்த தகவலை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
புதிய அம்பாசிடர் ஈவி, ரெட்ரோ + மோடர்ன் டிசைன் கலந்து உருவாக்கப்படும் என ஆரம்பத்திலேயே தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய சந்தையில் செடான்கள் குறைந்தபட்ச வரவேற்பை எதிர்நோக்கும் நிலையில், இது கிராஸ்ஓவர் வடிவத்தில் வரலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். காரின் மதிப்பீடு ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை இருக்கலாம் என்றும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த கார் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது.
LIC மட்டுமன்றி, ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் பங்குகளில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் (FIIs) பங்குகளை சிறிது அதிகரித்துள்ளனர். 2024 டிசம்பரில் 0.05% ஆக இருந்த பங்கு வைத்திருப்புகள், 2025 மார்ச் இறுதியில் 0.14% ஆக உயர்ந்துள்ளன.
அம்பாசிடர் மற்றும் பெட்ஃபோர்ட் லாரி போன்ற புகழ்பெற்ற வாகனங்களை உருவாக்கிய ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், தற்போது வாகன உதிரி பாகங்கள் மற்றும் காம்போனென்ட் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. முன்னதாக, மிட்சுபிஷி லான்சர் போன்ற செடான் கார்களை இந்தியாவில் ஒருங்கிணைத்த அனுபவம் கொண்டது.
இப்போது எலக்ட்ரிக் வாகன துறையில் ஒரு புதிய பாதையை தேர்வு செய்துள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம், கடும் போட்டியுள்ள EV சந்தையில் எவ்வாறு பரிணாமம் அடைகிறது என்பதை பங்கு சந்தை ஆர்வலர்கள் பாசிட்டிவாக கவனித்து வருகின்றனர்.