சரணாகதி என்றால் சரண் அடைவது. இதையே ஆங்கிலத்தில் சரண்டர்னு சொல்வாங்க. தாங்கவே முடியாத பிரச்சனை, தீர்க்கவே முடியாத பிரச்சனை வரும்போது நம் மனம் சோர்வடைந்து போகிறது. அந்த நேரத்தில் நாம் ஆண்டவனே கதி என சரணடைந்து விடுகிறோம்.
அதுவரை நாத்திகராக இருப்பவர்கள் கூட இதுபோன்ற ஒரு கட்டத்தில் ‘இத்தனை நாளும் நான் தப்பு பண்ணிட்டேன் ஆண்டவா. என்னை மன்னிச்சிக்கோ…’ன்னு இறைவனிடம் சரணாகதி அடைவதை நாம் பார்த்திருப்போம். அந்த ஒரு நேரத்தில்தான் நாம் சரணாகதி அடைய வேண்டுமா? நாம் தினம் தினம் நம்மையே அறியாமல் சரணாகதி அடைகிறோம். எப்படின்னு தெரியுமா? உண்மையில் சரணாகதின்னா என்னன்னு பார்க்கலாமா?
ஒரு பிரச்சனை நமக்கு வருகிறது. அதற்குத் தீர்வு தெரியவில்லை. என்றால் என்ன செய்கிறோம் ? உடனே அதை எப்படி சமாளிப்பது என்று தீர்வைத் தேடுகிறோம். பல வழிகளை எப்படி கையாள்வது என்று யோசிக்கிறோம். பின்பு அதை செயல்படுத்துகிறோம்.
எதற்குமே சரியாகாமல் செல்லும் வழி எல்லாம் அடைபட்டிருந்தால், மெல்ல ஒரு குழப்பம் நீடிக்கிறது. அது விஸ்வ௹பம் எடுக்கிறது ஒரு தெளிவற்ற மனநிலைக்கு நம்மை வழி நடத்துகிறது. நம் நம்பிக்கையை குறைக்கிறது. நாம் குழப்பம் அடைந்துள்ள போது நம் எண்ணங்களை நாம் சரியான முறையில் கையாள முடிவதில்லை.
குழப்பத்தை நீக்க எடுக்கும் முயற்சி மேலும் அதிக குழப்பத்தை உண்டாக்கும்.மனதளவில் மிகவும் சோர்ந்து விடுகிறோம்.பின்பு நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விடுகிறோம். இங்கு தான் சரணாகதி வருகிறது.
‘கடவுளே இது எனக்கு மிகவும் அதிகம். இதை என்னால் தாங்க முடியாது. இதை நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள். எனக்கு நல்வழி காட்டுங்கள்’ என்று இறைவனிடம் சமர்ப்பிக்கிறோம்.
சட்டென்று மனபாரம் நீங்கி ஒரு ஓய்வை உணர்கிறோம்.இந்த சமர்ப்பித்தல் நம் வாழ்வில் சூட்சுமமான முறையில் தினந்தோறும் நடைபெறுகிறது.இல்லையெனில் நம்மால் தூங்க முடியாது.படுக்கைக்குப் போகுமுன் நாம் என்னசெய்கிறோம்?
நம் எண்ணங்கள், ஆசைகள், பிரச்னைகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு படுக்கையில் தலையணையில் சாய்கிறோம். ஒவ்வொரு இரவும் சமர்ப்பிக்கி றோம். காலையில் மறுபடியும் எடுத்துக் கொள்கிறோம் இரவில் சமர்ப்பித்து விட்டு, தூங்கி காலையில் எழும் போது மிகவும் லேசாக உணர்கிறோம். இரவில் என்ன நடக்கிறது ?
நமது ஆழ் மனது பிரபஞ்ச பேரறிவுடன் இணைந்து ஒரு தீர்வை நோக்கி பயணிக்கிறது. காலையில் சட்டென்று சில சமயம் ஒரு யோசனை வரும். இப்படி செய்யலாமே என்று. ஏன் அது முன்னாலே தோன்றவில்லை? என்று. நமது கர்மவினைப் பதிவுகளுக்கேற்ப ஒரு தீர்வு நிச்சயம் உண்டு.
நம்மை மீறி மனம் சோர்வடையும்போது எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு சரணடைந்து விடுங்கள். அந்த பிரபஞ்ச பேராற்றல், பிரபஞ்சத்தையே காக்கும் அந்த அருட்பேராற்றல்,அறிவாக நம்முள்ளே இருக்கும் அதே பேராற்றல் நம்மை காப்பாற்றும். எல்லாம் அவன் செயல் என்று சரணாகதி அடைவது மட்டுமே நம் வேலை.