குலதெய்வம் தெரியாமல் இருப்பது பல குடும்பங்களில் ஏற்படும் ஒரு இயல்பான சூழல்தான். அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். வாங்க எப்படி தெரிந்து கொள்வதுன்னு பார்க்கலாம்.
குடும்பத்தில் உள்ள வயதான உறவினர்களிடம் அதாவது பெரியப்பா, சித்தப்பா, அத்தை, மாமா, தாத்தா வழி உறவினர்களிடம் விசாரிக்க வேண்டும். உங்கள் சொந்த ஊர், பூர்வீக கிராமம், பழைய வீடு அல்லது குடும்பத்துடன் தொடர்புடைய பகுதிகளில் உள்ள மூத்தவர்களிடம் கேட்டு அறிய முயற்சிக்க வேண்டும்.
பழைய திருமண அழைப்பிதழ்கள், குடும்ப குறிப்புகள், வம்சாவளி பதிவுகள், பழைய புகைப்படங்கள் போன்றவற்றில் தகவல்கள் இருக்கலாம். குடும்பத்தில் தொடர்ந்து வழிபட்டு வந்த அம்மன், ஐயனார், கருப்பசாமி, முனீஸ்வரன், சுடலைமாடன் போன்ற தெய்வங்களைப் பற்றி ஆராயலாம்.
குடும்ப உறுப்பினர்கள் பலர் சேர்ந்து ஆலோசித்து, கிடைக்கும் தகவல்களை ஒப்பிட்டு பார்க்கலாம். குலதெய்வம் கண்டிப்பாக கனவில் வந்து சொல்லும். ஜோதிடம் மூலம் 100 சதவீதம் கண்டுபிடிக்கலாம். இது போன்ற கருத்துகளுக்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை. அவற்றை மட்டும் நம்பி முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.
குலதெய்வம் தெரியாத நிலையில் என்ன செய்யலாம்? என்று கேள்வி எழவதுண்டு. அவர்கள் குலதெய்வம் எது என தெரியாதவரை தினமும் இறைவனை மனமுருகி வணங்கி, ‘எங்கள் முன்னோர்களைக் காத்து வந்த குலதெய்வமே, உங்களை அறியும் வாய்ப்பை அருள்வீராக” என்று பிரார்த்தனை செய்யலாம். குலதெய்வம் தெரிந்த பிறகு முறையாக வழிபாட்டை தொடரலாம்.
முக்கியமாக, குலதெய்வம் தெரியாதது குற்றமல்ல. தெரிந்துகொள்ள உண்மையான முயற்சி செய்வதும், முன்னோர்களை நினைத்து நன்றியுடன் வாழ்வதும் மிக முக்கியமானது.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



