நாளை சித்ரா பௌர்ணமி… இங்கெல்லாம் சித்தர்கள் வலம் வருவார்களாமே… உண்மையா?

சித்ரா பௌர்ணமி தினத்தன்று பல முக்கிய தலங்களில் உள்ள இறை மூர்த்தங்களை வழிபடுவதற்காக சித்தர்களும் வருவார்கள். அந்த வகையில் நம்பிமலை, கொல்லிமலை, பொதிகை மலை, தீர்த்த மலை, திருவண்ணாமலை, சதுரகிரி மலை, இலங்கையில் கதிர்காமம்,…

சித்ரா பௌர்ணமி தினத்தன்று பல முக்கிய தலங்களில் உள்ள இறை மூர்த்தங்களை வழிபடுவதற்காக சித்தர்களும் வருவார்கள். அந்த வகையில் நம்பிமலை, கொல்லிமலை, பொதிகை மலை, தீர்த்த மலை, திருவண்ணாமலை, சதுரகிரி மலை, இலங்கையில் கதிர்காமம், கபிலவத்தை, வேலோடு மலை உள்பட பல்வேறு மலைகளில் சித்தர்களும் வலம் வருவார்கள்.

இறைவனின் அருளை பெறுவதற்காக சித்தர்கள் பல்வேறு வடிவங்கள் எடுத்து வருவதாக நம்பப்படுகிறது. வண்ணத்துப்பூச்சியாக, நாகங்களாக ஏதோ விலங்காக அல்லது மனிதர்கள் போலவே சித்தர்கள் வலம் வருவார்கள். அந்த சமயத்தில் நாமும் சென்றால் நமக்கு இறையருளும் சித்தர்களின் அருள் ஆசியும் கிடைக்கும்.

எனவேதான் கிரிவல தலங்களில் உள்ள சித்தர்களின் ஜீவ சமாதியை சித்ரா பவுர்ணமி தினத்தன்று தவறாமல் வழிபட வேண்டும் என்று நமது மூதாதையர்கள் அறிவுறுத்தி உள்ளனர். சித்த மலைகளில் ஏற்கனவே நிறைய சித்தர்களின் அருள் உள்ளது.

சித்ரா பௌர்ணமி தினத்தன்று மற்ற இடங்களில் உள்ள சித்தர்களும் நம்பிமலைக்கு வந்து பூத நாராயண சித்தர் தலைமையில் ஒன்று கூடி உலக மாற்றங்களை பற்றி முடிவெடுப்பார்கள் என கோரக்கர் மலை வாடகம் என்ற நூலில் கோரக்கர் பெருமான் சொல்கிறார். ஆகையால் செல்பவர்கள் ஈசன் பெயருடன் சித்தர்களையும் நினைத்து வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.

பொதிகை மலையில் அகத்தியரை சித்ரா பௌர்ணமி தினம் வழிபட்டால் சிவபெருமானின் திருவடியை மிக எளிதாக சென்றடைய முடியும் என்பார்கள். அதுபோல மதுரையில் ஒவ்வொரு சித்ரா பௌர்ணமி தினத்தன்றும் இந்திரனே நேரில் வந்து சொக்கநாதரை பூஜித்து வழிபடுவதாக சொல்வார்கள். அந்த சமயத்தில் மதுரை சொக்கநாதரை நாமும் வழிபட்டால் இந்திரனின் அருள்ஆசி பெற முடியும்.

சித்ரா பௌர்ணமி தினத்தன்று சித்திரை நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் சேர்வதால் கடலில் நீராடுவது மிகவும் நல்லது என்று நம் முன்னோர்கள் கணித்து உள்ளனர். கடலில் நீராடினால் இதுவரை சம்பாதித்த பாவங்கள் அனைத்தையும் கரைத்து விடலாம் என்பது ஐதீகம்.

அன்றைய தினம் கடலில் புனித நீராட வருபவர்களுக்காக சித்தர்கள், ரிஷிகள் தயாராக காத்து இருப்பார்கள் என புராணங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. எனவே கடலில் புனித நீராடினால் சித்தர்களின் ஆசி பரிபூரணமாக நமக்கு கிடைக்கும். அன்றைய தினம் மூலிகை குளியல் செய்வதால் அனைத்து வித தோஷங்களில் இருந்தும் விடுதலை பெறுவதாக போகர் சொல்கிறார்.