இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மீண்டும் போர் பதற்றம் வெடித்துள்ள நிலையில் “ஆபரேஷன் சிந்தூர்” என பெயரிடப்பட்ட நடவடிக்கைக்கு பின் இருநாடுகளும் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன.
பாகிஸ்தானின் தாக்குதலின் போது, ஜம்மு, பிகானேர், ஜாலந்தர், கிஷ்த்வார், அக்நூர், சாம்பா, அம்ரித்தசர் போன்ற நகரங்களில் முழுமையான மின்வெட்டு ஏற்படுத்தப்பட்டது பாதுகாப்பு நடவடிக்கையாக. சில இடங்களில் அலாரங்கள் கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜம்முவில் ரஜோரி பகுதியில் பாகிஸ்தான் குண்டுவீச்சில், மாவட்ட மேம்பாட்டு கூடுதல் ஆணையர் ராஜ்குமார் தப்பா உயிரிழந்தார். இதுகுறித்து முதல்வர் ஓமர் அப்துல்லாவின் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு உருக்கமான செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
“நாங்கள் எங்கள் முக்கியமான ஒரு அதிகாரியை இழந்துள்ளோம். நேற்று வரை அவர் துணை முதல்வருடன் பணியில் ஈடுபட்டிருந்தார். இன்று அவரது வீடு பாகிஸ்தான் குண்டுவீச்சில் பாதிக்கப்பட்டது. அதில் அவர் உயிரிழந்தார். இந்த துயரத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை. அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும்.” என்று கூறியுள்ளார். ஜம்முவில் அதிகாரி உயிரிழந்த பின்னர் தற்போது மத்திய உள்துறை அமைச்சகம், எல்லை பாதுகாப்பு படைகள், மற்றும் விமானப்படை மூலம் தொடர்ந்து எல்லைகள் கண்காணிக்கப்படுகிறது.
மேலும் பாகிஸ்தான் ராணுவம், இன்று காலை வழிபாடு மற்றும் மத தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஜம்முவில் உள்ள காஷ்மீர் பண்டிட் சமூகத்தின் ‘ஷம்பூ கோவில்’ தாக்குதலுக்குள்ளானது.
மேலும் ராணுவத்தில் இருந்து வந்த தகவல்களின்படி, பாகிஸ்தானில் உள்ள குறைந்தது நான்கு விமானத் தளங்கள் இந்தியா மேற்கொண்ட பதிலடி தாக்குதலால் தீவிரமாக சேதமடைந்துள்ளன.
இந்தியா, இரு பாகிஸ்தான் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது. ஸ்ரீநகரில் வான்வழி தாக்குதல் நடத்த முயன்றபோது, அந்த விமானங்கள் நகரத்திற்கு வெளியே சுட்டு வீழ்த்தப்பட்டன என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.