பெட்ரோல், டீசல் நிலையங்களை மூட பாகிஸ்தான் அரசு உத்தரவு.. கையிருப்பு இல்லையா?

  பாகிஸ்தானின் தலைநகரமான இஸ்லாமாபாத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பு நிலையங்களும் 48 மணி நேரத்திற்கு உடனடியாக மூடப்படுவதாக பாகிஸ்தான் அரசு தரப்பில் இன்று காலை அறிவிக்கப்பட்டது. இந்த முடிவு ஏன்…

petrol

 

பாகிஸ்தானின் தலைநகரமான இஸ்லாமாபாத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பு நிலையங்களும் 48 மணி நேரத்திற்கு உடனடியாக மூடப்படுவதாக பாகிஸ்தான் அரசு தரப்பில் இன்று காலை அறிவிக்கப்பட்டது.

இந்த முடிவு ஏன் என்ற ஊடகங்களின் கேள்விக்கு பாகிஸ்தான் அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ காரணம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் முன்னணி ஊடகம் ஒன்று வெளியிட்ட  தகவலின்படி, பாகிஸ்தானில் எரிபொருள் கையிருப்பு குறைவாக இருப்பதாகவும், எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெட்ரோல் நிலையங்களை மூடி இருக்கலாம் என கூறப்படுகிறது.

பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் தனியார் வாகனங்கள் பெட்ரோல் போட முடியாது. பொது மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்படும் ஜெனரேட்டர்களை சார்ந்துள்ள தொழில்கள் மற்றும் வியாபாரங்களும் இயங்க முடியாமல் போவதற்கான வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.

பாகிஸ்தான் அதிகாரிகள் இதுகுறித்து கூறியபோது, “இது ஓர் கட்டுப்பாடான விநியோகத்திற்கான சூழ்நிலையை உருவாக்குவதற்காகவும், மக்கள் திடீரென எரிபொருளை அளவுக்கு அதிகமாக வாங்கி குவிக்காமல் இருப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு என கூறியுள்ளனர்.

ஆனால் பெட்ரோல், டீசல் நிலையங்கள் மூடப்பட்டதன்  முடிவின் பின்னணி, நாட்டில் பல விமானத் தளங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக, இஸ்லாமாபாத்துக்கு அருகிலுள்ள முக்கியமான ‘நூர் கான்’ விமானத் தளம் உள்ளிட்ட மூன்று பாகிஸ்தான் விமானப் படைத் தளங்கள் தாக்கப்பட்டன.

இதையடுத்து, பாகிஸ்தான் அரசு அனைத்து வான்வழி போக்குவரத்தையும் உடனடியாக நிறுத்தி, பொதுமக்கள் மற்றும் வர்த்தக விமானங்களுக்கு வான்வழியை மூடியுள்ளது.

இந்த இரண்டு சம்பவங்களுக்கும், பெட்ரோல், டீசல் நிலையங்கள் மூடப்பட்ட சம்பவத்திற்கும் நேரடி தொடர்பு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இஸ்லாமாபாத்தின் பெட்ரோல் நிலையங்களை மூடுவதற்கான காரணமாக, பாதுகாப்பு சூழ்நிலை ஒரு முக்கிய காரணி என கருதப்படுகின்றது.

இந்த சம்பவங்கள் பாகிஸ்தானில் நிலவும் பாதுகாப்பு நிலைமை குறித்து பல கேள்விகளை எழுப்புகின்றன. மக்கள்  எரிபொருள் தேவையை  பெற முடியாத அளவுக்கு சிக்கலில் உள்ளனர்.