இந்த நிலையில் இன்னும் சில ஆண்டுகளில் MBBS மற்றும் Teacher Training அதாவது டாக்டர் மற்றும் ஆசிரியர் வேலைக்காக யாரும் படிக்க மாட்டார்கள் என்றும் தரமான கல்வி மற்றும் நவீன மருத்துவம் உலகம் முழுவதும் இலவசமாக அல்லது குறைந்த விலையில் கிடைக்கும் என்று உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் கணித்துள்ளார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், “2035க்குள் செயற்கை நுண்ணறிவு (AI), டாக்டர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல தொழில் முனைவர்களை மாற்றிவிடும்” என 100% அடித்து கூறியுள்ளார். மேலும், “சிறந்த மருத்துவ ஆலோசனையும், சிறந்த தனிப்பட்ட கற்றல் சேவையும் இலவசமாக கிடைக்கும் அளவிற்கு AI முன்னேறும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பல பேட்டிகள் மற்றும் பொதுவான நிகழ்வுகளில் அவர் தெரிவித்த கருத்துகள், உலகம் ஒரு “இலவச நுண்ணறிவு” யுகத்திற்குள் நுழையவுள்ளதாக வெளிப்படுத்துகின்றன. அதாவது, நிபுணத்துவம் கொண்ட அறிவும் சேவைகளும் எல்லோருக்கும் இலவசமாக அல்லது குறைந்த செலவில் கிடைக்கும் ஒரு புதிய சூழல் உருவாகும்.
மிகவும் ஆழமான பயிற்சி தேவைப்படும் டாக்டர் மற்றும் ஆசிரியர் போன்ற தொழில்கள், காணாமல் போய்விடும் என்றும், இந்த இரண்டு பணிகளும் AI ஆல் மாற்றப்படும் என பில்கேட்ஸ் தெரிவிக்கிறார். “அடுத்த 10 ஆண்டுகளில் சிறந்த மருத்துவ ஆலோசனையும், சிறந்த கல்வியும் இலவசமாக கிடைக்கும்” என அவர் நம்புகிறார்.
இந்த மாற்றம் மருத்துவம் மற்றும் கல்வியை மட்டுமல்ல, தொழிற்சாலைகள், கட்டிடம், ஹோட்டல் துறை மற்றும் கைவேலை தேவைப்படும் பல வேலைகளையும் பாதிக்கும் என அவர் கூறுகிறார். லாஜிஸ்டிக்ஸ், உற்பத்தி, போக்குவரத்து, விவசாயம் ஆகிய துறைகளில் கூட AI மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் கணித்துள்ளார்.
AI தொழில்நுட்பம் வருவதால் வேலை இழப்பு மற்றும் வறுமை வந்துவிடும் என்பது அர்த்தமல்ல. குறைந்த நேரம் வேலை பார்த்தால் போதும் மன நிம்மதி மற்றும் அதிக ஓய்வு கிடைக்கும். அதே நேரத்தில் கிட்டத்தட்ட எல்லாமே இலவசம் அல்லது குறைந்த விலையில் கிடைக்கும் என்பதால் மிகக் குறைந்த வருமானம் வந்தால் கூட சொகுசாக வாழலாம் என்றும் இதன் மூலம் கணிக்கப்படுகிறது.
இந்த மாற்றம் உற்சாகமூட்டுவதாக இருந்தாலும், அதே நேரத்தில் குழப்பத்தையும் ஏற்படுத்தும் என்பதையும் அவர் ஒப்பு கொள்கிறார். சாமானிய மக்கள் வாழ்வதற்கான பொருட்கள் மற்றும் சேவைகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் என்ற நிலை ஏற்படலாம். ஆனால், இந்த பயன்கள் சமமாக பகிர்ந்துகொள்ளப்படாவிட்டால், வேலை இழப்பு மற்றும் வேற்றுமை அதிகரிக்கலாம் என அவர் எச்சரிக்கிறார். அதற்காக, அனைவருக்கும் அடிப்படை வருமானம், குறைந்த வேலை நேரம், பொருளாதார சமநிலை போன்ற கொள்கைகளை ஒவ்வொரு நாட்டின் அரசு பின்பற்ற வேண்டும்’ என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால் அதே நேரத்தில் உலகில் உள்ள அனைத்து வேலைகளையும் AI மாற்றிவிடும் என பில் கேட்ஸ் நம்பவில்லை. “மனோதத்துவர்கள், கலைஞர்கள், போன்ற உணர்வுப் பூர்வமான வேலைகள் மற்றும் மனித உறவுகள் தேவைப்படும் பணிகள் தொடரும் என அவர் நம்புகிறார். Coding, energy, மற்றும் biology துறைகளில் மனித நிபுணத்துவம் தொடர்ந்து தேவைப்படும் என அவர் கூறுகிறார்.