நாம ரெண்டு பேரும் பிரண்ட்ஸ்.. பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் சீனா.. அமெரிக்கா அதிர்ச்சி..!

  இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே கடந்த பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் இரு நாட்டின் உறவை மேம்படுத்தும் வகையில்…

india china america

 

இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே கடந்த பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் இரு நாட்டின் உறவை மேம்படுத்தும் வகையில் இல்லை என்பதும் தெரிந்தது.

அது மட்டுமின்றி அருணாச்சல பிரதேசத்தை உரிமை கொண்டாடுவது உள்பட சீனாவின் பல நடவடிக்கைகள் இந்தியாவை அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அமெரிக்கா சீனாவுக்கு 245% வரி விதித்த நிலையில் அமெரிக்காவை எதிர்க்க இந்தியாவுடன் கை கோர்த்தால் மட்டுமே தப்பிக்க முடியும் என்ற முடிவில் தற்போது சீனா வந்துள்ளது.

எனவேதான் இந்தியாவை நட்பு பாராட்டும் வகையில் சீனா செயல்பட்டு வருகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த நட்பு உண்மையானதா? அல்லது அமெரிக்காவை சமாளிக்க மட்டும் இந்தியாவை பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்யும் தந்திரமா? என்பதையும் இந்தியா ஆலோசிக்க வேண்டிய நேரம் இது என்று கூறப்பட்டு வருகிறது,

அமெரிக்காவுடன் வர்த்தக போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சீனா திடீரென இந்தியாவை நோக்கி திரும்பி, இந்தியாவுடன் தனது உறவுகளை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சி செய்யத் தொடங்கியுள்ளது. சமீபத்தில், சீன அரசு, பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டில் சீனாவுக்கு வரும்போது அவருக்கு உரிய மரியாதையுடன் வரவேற்கப்படும் என்று அறிவித்துள்ளது.

சீனாவின் இந்த அணுகுமுறை  சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவுகள் விரிசல் அடைந்ததே காரணம்,. டொனால்ட் ட்ரம்ப்,  சீனாவுக்கு எதிராக அதிகப்படியான வரி விதிப்பை ஆரம்பித்ததிலிருந்து, இரண்டு நாடுகளும் கடுமையான வர்த்தக போரில் ஈடுபட்டுள்ளன.

முதலில், ட்ரம்ப் சீனாவுக்கு 25 சதவீத வர்த்தக வரி விதித்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக சீனா அமெரிக்காவுக்கு அதே அளவிலான வரியை விதித்து, “அமெரிக்காவுக்கு வர்த்தக போர் வேண்டுமெனில், அதற்காக தயார்” என அறிவித்தது.

தற்போது, இரு நாடுகளும் ஒருவரையொருவர் குறிவைத்து வரிகளை விதித்து வரும் நிலையில், சீனா 245 சதவீத வர்த்தக வரியை எதிர்கொண்டுள்ளது. இந்த சூழ்நிலையை சீராக்கவும், விவேகமாகவும் கையாளத் தவறினால், குறிப்பாக ட்ரம்ப் அரசு மீதான அணுகுமுறையில் கவனம் காட்டாவிட்டால், அமெரிக்காவுக்கு  சீனாவின் ஏற்றுமதி கிட்டத்தட்ட நின்றுபோய் பொருளாதாரம் ஆட்டம் கண்டுவிடும்.

சீனாவை தவிர உலகின் மற்ற நாடுகள் ட்ரம்புடன் வர்த்தக உடன்படிக்கையை நெருங்கி கொண்டிருக்கின்றன. குறிப்பாக, இந்தியாவுடன் இருதரப்பு வர்த்தக உடன்படிக்கை  முடிவடையவுள்ளது என கூறப்படுகிறது. இதற்கிடையில், ட்ரம்ப், சீனாவை தவிர்த்து, தனது வரிகளை எதிர்த்துப் பதிலளிக்காத மற்ற நாடுகளுக்கு 90 நாட்கள் வரை தடையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார்.

இந்தக் கடும் சூழ்நிலைகளில், சீனா, இந்தியாவுடன் உறவுகளை சீர்படுத்தும் வகையில் தனது நிலைப்பாட்டை மேன்மைப்படுத்த முயற்சிக்கிறது. 2020-ஆம் ஆண்டு கல்வான் மோதல் மற்றும் எல்லை விவகாரத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளை சரி செய்யும் நோக்கத்துடன் செயல்படுகிறது.

இருப்பினும், சீனாவின் இந்த திடீர் மாறுதல் உண்மையானதா என்ற கேள்வி எழுகிறது, மேலும் இந்தியா அதனை நன்கு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர். இந்தியா, சீனா உறவு மேம்பட்டு, இரு நாடுகளும் சேர்ந்து அமெரிக்காவுக்கு எதிராக காய் நகர்த்தினால், நிச்சயம் அமெரிக்கா அதிர்ச்சி அடையும் என்று கூறப்பட்டு வருகிறது.