பாகிஸ்தான் மீண்டும் இந்திய எல்லையை நோக்கி நேற்று 9வது நாளாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இந்தியா பதிலடி கொடுத்து கொண்டிருக்கும் நிலையில் இந்தியா நினைத்தால் ஒரே ஒரு பெரிய அட்டாக் செய்தால் பாகிஸ்தான் காணாமல் போய்விடும் என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் எச்சரித்து வருகின்றனர்.
மே 2-ம் தேதி நள்ளிரவில் இருந்து மே 3-ம் தேதி காலையில் வரை பாகிஸ்தான் தரப்பில் இருந்து துப்பாக்கி சூடு நடந்ததாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது. குறிப்பாக குப்வாரா, உறி, அக்னூர் உள்ளிட்ட பல இடங்களில் திடீர் துப்பாக்கிச்சூடு நடந்திருப்பதாகவும் இது தொடர்ச்சியாக 9வது நாள் தாக்குதல் என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைப்புகளின் தரவின்படி கடந்த 8 நாட்களில் மொத்தம் 22 தாக்குதல்கள் நடந்துள்ளன. இதனால் எல்லைக்கு அருகில் உள்ள கிராமங்களில் மக்கள் மிகுந்த பயத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.
பாகிஸ்தான் முன்னெச்சரிக்கை இன்றி துப்பாக்கிச் சூடு நடத்தியது. ஆனால் நாங்கள் கட்டுப்பாட்டுடன் பதிலடி கொடுத்தோம், என இந்திய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. தற்போது வரை இந்தியப் பக்கம் யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை.
ஆனால் அதே நேரத்தில் தொடர்ச்சியான துப்பாக்கிச்சூடுகள் காரணமாக எல்லைப் பகுதிகளில் வாழும் மக்கள் பெரும் பதட்டத்தில் உள்ளனர். சில குடும்பங்கள் பாதுகாப்புக்காக பாதுகாப்பான வேறு பகுதிகளுக்கு இடம் மாற்றியுள்ளனர்.
குப்வாரா அருகே உள்ள கிராமவாசி ஒருவர் இதுகுறித்து கூறியபோது, ‘”ஒவ்வொரு இரவிலும் துப்பாக்கி சூடு நடக்கிறது. இப்போது நாங்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை.” என்றார்.
இது பற்றி இராணுவ வட்டாரங்கள் கூறியபோது, பாகிஸ்தான் இப்படி தாக்குதல் நடத்துவது இந்தியாவை தூண்டி வைக்கவும், அரசு மீது கோபமாக இருக்கும் பாகிஸ்தான் மக்கள் கவனத்தை திசை திருப்பவும் இருக்கும் என சந்தேகம் தெரிவித்துள்ளனர். சிலர், துப்பாக்கி சூடு மூலமாக பயங்கரவாதிகளை இந்திய எல்லைக்குள் தள்ள முயற்சி செய்யலாம் என்றும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
2021-ஆம் ஆண்டு இந்தியா–பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட தற்காலிக அமைதி ஒப்பந்தம் கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் அமைதியை உருவாக்கியிருந்தது. ஆனால் தற்போதைய நிலைமை, அந்த ஒப்பந்தமே தளர்வடைந்தது போல இருக்கிறது. பாகிஸ்தான் தனது அணுகுமுறையை மாற்றியுள்ளது என தெரிகிறது.
இந்திய இராணுவம் தற்போது எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு கண்காணிப்பை அதிகரித்துள்ளது. சந்தேகத்திற்கிடமான இடங்களில் கூடுதல் படைகள் மையமிட்டு பாதுகாப்பு கவனிக்கின்றனர். எல்லை ஊடுருவலோ, பிறர் தூண்டுதலோ இல்லாமல் இருக்க அலர்ட் நிலையில் உள்ளனர். பாகிஸ்தானின் இந்த சின்ன சின்ன தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மீண்டும் எழ முடியாத வகையில் அந்நாட்டுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என பெரும்பாலான இந்திய மக்களின் மனநிலையாக உள்ளது.