கௌரவமா நான் இருக்குறவன். எனக்கு மானம், மரியாதை தான் முக்கியம்னு சிலர் எல்லாம் கெத்தாகப் பேசுவதை நாம் பார்த்திருப்போம். அது தவறான விஷயமல்ல. கௌரவம் என்பது எப்படி நமக்கு கிடைக்கும்? நாம் செய்யும் செயல்கள், நடத்தையின் வாயிலாகத்தான் அது கிடைக்கும். ஒருவரிடம் நாம் ஒன்றைச் செய்வதாக வாக்குக் கொடுத்து விட்டு செய்யாமல் போனால் அது கௌரவமா? நம்மைப் பற்றி அவர் என்ன நினைப்பார்? அதனால் கௌரவம் என்றால் உண்மையைப் பேசுவதுதான். அதுதான் உங்களை அடுத்தடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும்.
மனிதர்களை எடை போடக் கற்பது தான் முதல் பாடம். மனிதர்களை எடை போட முடியாது எனக் கற்பது தான் இறுதிப்பாடம். உங்களின் எல்லா பிரச்சனைகளுக் கும் கடின உழைப்பு ஒன்று மட்டுமே தீர்வாக அமையும். அழிவுக்கு ஆயிரம் வழிகள் உண்டு ஆனால் உயர்வுக்கு ஒரே வழிதான் அது உழைப்பு தான். உழைப்பதற்குத் தயங்காத வரையிலும் பிழைப்பதற்குத் தடங்கல் இருக்காது.
இளமையில் உழைப்பை விதைத்தால் முதுமையில் வெற்றியை அறுவடை செய்யலாம். சவால்களும், தடைகளும் பல வந்தாலும் குறிக்கோளை அடைவதில் மட்டுமே உறுதியாக இருங்கள் வெற்றி உங்கள் கையில். தான் சிறந்த மனிதன் என்று யாருக்கும் நிரூபிக்க ஆசைப்படாத மனிதன் எவனோ, அவனே உண்மையில் சிறந்த மனிதன்.
சிந்திப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் அதை செயல்படுத்தும் போது, அது குறித்து சிந்திப்பதை நிறுத்தி விடுங்கள். நாம் செய்யும் செயல்களில் இருந்து நமக்குக் கிடைப்பது வெற்றியோ, தோல்வியோ அல்ல… மன நிறைவும், அனுபவங்களும் தான்… இவ்விரண்டும் தான் நம்மை முழுமை பெற்ற மனிதராக உருவாக்குகிறது.. உண்மையை மட்டும் பேசுங்கள். அது உங்களின் கௌரவத்தைப் பாதுகாக்கும்.