பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தானுடன் இருக்கும் சிந்து நீர்த் ஒப்பந்தத்தை இடைநிறுத்தியுள்ள நிலையில், உலக வங்கி குழுமத் தலைவர் அஜய் பங்கா இன்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தார்.
இந்த சந்திப்பு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதிகளில் பயங்கரவாத அமைப்புகளின் மீது இந்தியா விமான தாக்குதல்கள் நடத்திய பிறகு நடைபெறுகிறது. பாகிஸ்தான் நேற்று 15 இந்திய நகரங்களில் உள்ள ராணுவ தளங்களை தாக்க முயன்றது; ஆனால் இந்தியா அதனை தடுத்து நிறுத்தியது. அதற்கு பதிலாக, இன்று இந்தியா பாகிஸ்தானின் விமான பாதுகாப்பு அமைப்புகளை தாக்கியது.
இந்த நிலையில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் 1960-ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு மற்றும் பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் இடையே கையெழுத்தாகியது. இந்த ஒப்பந்தத்துக்கான ஒத்திசைவில் உலக வங்கியும் முக்கிய பங்காற்றியது, அதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதும் உலக வங்கி தான்.
இந்த நிலையில் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்தியதையடுத்து, கடந்த சில நாட்களாக ஜம்மு மற்றும் காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் உள்ள செனாப் நதியில் அமைந்த பக்ளிஹார் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த அணை ஒரு “ரன்-ஆஃப்-தி-ரிவர்” முறைமைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டதாலும், மிகக் குறைவான அளவு நீரையே தாங்க முடியும். நீர் சேமிப்பை நீடிக்க வேண்டும் என்றால், அணையின் உயரத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அது உடனடியாக நடக்க முடியாது. எனவே, நீர்கட்டுப்பாடு என்பது பாகிஸ்தானுக்கு இந்தியா தரும் கடும் எச்சரிக்கை என்றே பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தான் உலக வங்கி தலைவர் அஜய் பங்கா இந்தியாவுக்கு வருகை தந்து பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில்
பாகிஸ்தானுக்கு உலக வங்கி அளித்து வரும் நிதி உதவியை நிறுத்த இந்தியா வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி உலக வங்கி மட்டும் பாகிஸ்தானுக்கு அளித்துவரும் நிதி உதவியை நிறுத்தினால் பாகிஸ்தான் திவால் ஆவது உறுதி என்று பொருளாதாரம் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்
பாகிஸ்தான் இப்போது ஓரளவாவது பொருளாதாரத்தில் சிக்கல் இன்றி இருக்கிறது என்றால் அதற்கு உலக வங்கி தரும் நிதி தான் காரணம் என்றும் உலக வங்கி மட்டும் பணத்தை நிறுத்திவிட்டால் பாகிஸ்தான் கதி அதோ கதிதான் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் நாளை உத்தரப்பிரதேச மாநிலத்துக்கும் பயணம் மேற்கொண்டுஅங்கு சில கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார். குறிப்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களையும் அவர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.