பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக அறிவித்துள்ள ஐந்து முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று ‘Indus Waters Treaty’ ஒப்பந்தம். இந்த ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் பல நிபுணர்கள் இரு நாடுகளுக்கிடையிலான முதல் ‘நீர்போர்’ என குறிப்பிடுகின்றனர்.
இந்தியா, “Abeyance” என்ற சொல்லை கவனமாக பயன்படுத்தியுள்ளது. இதன் மூலம், பாகிஸ்தான் எல்லை கடந்த தீவிரவாதத்தை நிறுத்தி, குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டுவந்தால், ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்தும் வாய்ப்பு உண்டு.
இந்தியாவின் இந்த முடிவு, இரு நாடுகளுக்கும் இடையே நீர் செல்லவே செல்லாது என்பதல்ல. ஆனால், இது நீரை கட்டுப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாகும். இதுவரை Indus Waters Treaty ஒப்பந்தம் மிகுந்த மரியாதையுடன் கையாளப்பட்டு வந்தது. ஆனால் பஹல்காம் தாக்குதலுக்கு பின் முதல் முறையாக இந்தியா அந்த ஒப்பந்தத்தில் விதிகளை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒப்பந்தத்தை “Abeyance” நிலைக்கு கொண்டுவருவதால் இந்த திட்டம் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே தகவல்களும் தரவுகளும் பரிமாறப்படாது. இது பாகிஸ்தானின் நதிநீர் மேலாண்மையில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தி, எதிர்காலத்தில் பெரிய நீர் நெருக்கடியை உருவாக்கும்.
பாகிஸ்தானில் நீண்ட காலமாக வறட்சி நிலவுகிறது; மழை அளவு சராசரிக்குக் கீழே பெய்துள்ளது. இந்த சூழலில், இந்திய அரசின் முடிவு பாகிஸ்தானுக்கு இன்னும் மோசமான நிலையை உருவாக்கலாம். ஏனெனில், இனி இந்தியா பாகிஸ்தானுக்கு எந்தவிதமான நீர் தரவுகளும் வழங்காது. இது பாகிஸ்தானின் நதி மேலாண்மையை மேலும் சீர்கேடாக்கும்.
இந்தியாவின் இந்த நடவடிக்கை, பாகிஸ்தானுக்கு நீர் செல்லும் சுதந்திரத்தை முடக்கும் முதல் பெரிய நடவடிக்கையாகும். இதன் மூலம், பாகிஸ்தானுக்கு தெளிவான எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. நீங்கள் எல்லை கடந்த தீவிரவாதத்தை நிறுத்தி ஒப்பந்தத்தை மீண்டும் பெறலாம், அல்லது உங்கள் பழைய பாதையை தொடருங்கள்; இந்தியா நீர் சுதந்திரத்தை முற்றிலும் நிறுத்தும்.
பாகிஸ்தான் உலகிலேயே மிகவும் வறட்சியான நாடுகளில் ஒன்றாகும். ஆண்டுக்கு சராசரியாக 240 மில்லி மீட்டர் மழை மட்டுமே கிடைக்கிறது. பாகிஸ்தானின் மொத்த வேளாண் உற்பத்தியின் 90% இந்தஸ் பாசன அமைப்பின் கீழ் நடைபெறுகிறது. இந்திய நதிகளில் இருந்து கிடைக்கும் வேளாண்மை மற்றும் நீர்மின் சக்தி, பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 24%, வேலைவாய்ப்பின் 45% மற்றும் ஏற்றுமதியின் 60% க்கும் மேல் பங்களிக்கின்றன.
மூன்றாவது உலகப்போர் தண்ணீரால் தான் ஏற்படும் என ஏற்கனவே ஒரு கணிப்பு உள்ள நிலையில் அதன் ஆரம்பம் தான் பாகிஸ்தானுக்கு இந்தியா தண்ணீரை நிறுத்தியதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.