இந்தியாவின் மேம்பட்ட S-400 ஏர் டிஃபென்ஸ் ‘சுதர்சன சக்கரம்’ என அழைக்கப்படும் அமைப்பு இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து புறப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வானில் தடுத்து அழித்தது.இந்த தாக்குதல் பஞ்சாப் மாநிலத்தில் அதிகாலை 1:10 மணிக்கிருந்து 1:20 மணி வரை நடைபெற்றது. இந்த நேரத்தில் பாகிஸ்தான் 15 நகரங்களை, குறிப்பாக ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், சண்டிகர் ஆகியவற்றை குறிவைத்திருந்தது. ஆனால் இந்திய விமான பாதுகாப்பு அமைப்பு, நடுவானில் அதனை அழித்தது.
இந்தியாவின் வட மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயன்றது. ஆனால் இந்தியா இந்த தாக்குதலுக்கு தயாராக இருந்தது. ‘இன்டிகிரேட்டெட் கவுண்டர்-யூ.ஏ.எஸ். அமைப்பு’ மற்றும் ஏர் டிஃபென்ஸ் அமைப்புகள் மிக விரைவில் செயல்பட்டு பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கண்டுபிடித்து அழித்தன.
இந்தியா, பதிலடியாக பாகிஸ்தான் விமான பாதுகாப்பு ரேடார்கள் மற்றும் லாகூரில் உள்ள முக்கிய புள்ளிகளில் துல்லியமான தாக்குதல்களை மேற்கொண்டது. ஒரு முக்கிய விமான பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் கனமான ஆயுதங்கள், மார்டர்கள் கொண்டு தாக்குதல் நடத்தியது. குறிப்பாக, குப்வாரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், மேந்தர் மற்றும் ராஜௌரி மாவட்டங்கள் தாக்கப்பட்டன. இதில் 16 பொதுமக்கள், அதில் 5 குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் உயிரிழந்தனர்.
ஜம்முவின் பூஞ்ச் பகுதியில் உள்ள ஒரு குருத்வாராவில் பாகிஸ்தானில் இருந்து வந்த மார்டர் செல் வீழ்ந்தது. அதன் சுவர் சேதமடைந்தது. அருகிலுள்ள மற்ற சில இடங்களும் தாக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய கச்சின் கவ்வடா பகுதியில், பாகிஸ்தான் வழியாக வந்த ட்ரோன் ஒன்று உயரழுத்த மின் கம்பியை தாக்கி வெடித்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் “நாங்கள் சண்டையை விரும்பவில்லை, ஆனால் யாரேனும் எங்களை தாக்க முயற்சித்தால் அதை விடவும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று இந்தியா கூறியுள்ளது.