முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மகள் திருமணத்தில் தங்கம் பூசப்பட்ட பீடா விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே அரவிந்த் கெஜ்ரிவால் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர் என்றும், அவர் முதல்வராக இருக்கும்போது, அவருடைய வீட்டை மராமத்து பணி செய்யவே பல நூற்றுக்கணக்கான கோடிகள் செலவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, அரசு சொகுசு மாளிகைக்கும் அவர் நூற்றுக்கணக்கான கோடி செலவு செய்தார் என்றும், மக்களின் வரிப்பணத்தை அவர் தன்னுடைய சொந்த ஆடம்பரத்திற்காக பயன்படுத்திக் கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா திருமணம் சமீபத்தில் நடந்தது. ஹர்ஷிதா தனது கல்லூரி கால நண்பர் சம்பவ் ஜெயின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் பஞ்சாப் முதல்வர் உள்பட பல அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த திருமணம் சாதாரணமாக நடப்பது போல் தோன்றினாலும், திடீரென திருமண விருந்தினர்களுக்கு கொடுக்கப்பட்ட தங்கம் பூசப்பட்ட பீடா தான் பரபரப்பு ஏற்படுத்தியது.
டெல்லியில் உள்ள பிரபல பான் பீடா கடை ஒன்று, திருமணம் நடந்த இடத்திலேயே தற்காலிகமாக அமைக்கப்பட்டதாகவும், அனைத்து விருந்தினர்களுக்கும் தங்க முலாம் பூசப்பட்ட பீடா வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த பீடாவை சாப்பிடும் வீடியோக்களை திருமணத்திற்கு சென்ற பிரமுகர்கள் தங்களது சமூக வலைதளத்தில் பதிவு செய்த நிலையில், இந்த வீடியோவுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.