நீ எப்படி வீட்டுக்கு உயிருடன் போகிறாய் என பார்க்கிறேன்: பெண் நீதிபதி தீர்ப்புக்கு பின் மிரட்டிய குற்றவாளி..!

  டெல்லி நீதிமன்றத்தில் செக் பவுன்ஸ் வழக்கில் பெண் நீதிபதி தீர்ப்பளித்த பின்னர் குற்றம் சாட்டப்பட்ட நபர் ‘வெளியே நீ வந்து தானே ஆக வேண்டும், நீ எப்படி வீட்டுக்கு உயிருடன் போகிறாய் என…

judge

 

டெல்லி நீதிமன்றத்தில் செக் பவுன்ஸ் வழக்கில் பெண் நீதிபதி தீர்ப்பளித்த பின்னர் குற்றம் சாட்டப்பட்ட நபர் ‘வெளியே நீ வந்து தானே ஆக வேண்டும், நீ எப்படி வீட்டுக்கு உயிருடன் போகிறாய் என பார்க்கிறேன் என மிரட்டியதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி நீதிமன்றத்தில் நீதிபதி சிவாங்கி மங்களா, ஏப்ரல் 2ஆம் தேதி, ஒரு நபரை செக் பவுன்ஸ் வழக்கில் பிரிவு 138ன் கீழ் குற்றவாளி என தீர்ப்பு வழங்கி, இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம்  பிரிவு 437Aன் கீழ் பிணை பத்திரம் வழங்க உத்தரவிட்டிருந்தார். ஆனால் அதற்குப் பிறகு நடந்த நிகழ்வுகள் அதிர்ச்சி அளிக்கக்கூடியவையாக இருந்தன.

நீதிபதியின் உத்தரவில் குறிப்பிடப்பட்டபடி, குற்றவாளி அவரது மேல் பொருள் ஒன்றை எறிய முயன்றதுடன், தனது வழக்கறிஞருக்கு “இந்த தீர்ப்பை மாற்ற என்ன வேண்டுமானாலும் செய்” என உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், குற்றவாளி கோபத்தில், “நீ என்ன பெரிய இவளா? வெளியே வந்துப்பார், எப்படி உயிரோடு வீட்டுக்குப் போகிறாய் என பார்க்கலாம்!” என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

உடனே நீதிபதி மங்களா தனது உத்தரவில், குற்றவாளி மற்றும் அவரது வழக்கறிஞர் அதுல் குமார் ஆகியோர், தன்னை மிரட்டியதாகவும்,  தன்னை பதவி விலக வைப்பதற்கான அழுத்தமாக இருந்ததாகவும் குறிப்பிட்டு  இந்த மிரட்டலுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  தெரிவித்துள்ளார்.

“இந்த குற்றவாளியின் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். குறிப்பாக, இந்த மிரட்டல் மற்றும் தொந்தரவு தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையத்தில் முறையிடப்படும்” என  நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வழக்கறிஞர் அதுல் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பி, இதுகுறித்து எழுத்துப்பூர்வ விளக்கம் வழங்குமாறு  நீதிபதி உத்தரவிட்டார்.