இந்தியாவின் பல பகுதிகளில் இன்று UPI பணப் பரிமாற்ற முறையில் தடை ஏற்பட்டுள்ளது என்ற செய்திகள் பரவலாக வெளிவந்துள்ளன. சேவை தடை நிலைகளை கண்காணிக்கும் Downdetector என்ற தளத்தின் தகவலின்படி, காலை 10:45 மணி முதல் புகார்கள் குவியத் தொடங்கின.
பயனர்கள் சமூக ஊடகங்களில் தங்களின் மோசமான அனுபவங்களை பகிர்ந்தனர். ஒருவர், “UPI வேலை செய்யவில்லை, தயவுசெய்து சரிபார்க்கவும்,” என பதிவிட்டார். மற்றொருவர், “UPI டவுனாக உள்ளது போலிருக்கிறது, பணம் செலுத்த முடியவில்லை. #upidown,” என்று ட்வீட் செய்தார்.
இன்னொருவர் “UPI மீண்டும் டவுனா? மீண்டும் ரொக்க பணத்திற்கு திரும்பணுமா? இது பொருளாதாரத்தையும் உங்கள் டிஜிட்டல் கனவுகளையும் ஒரே நேரத்தில் நாசமாக்கும்! #UPIFail,” என்று விமர்சித்தார்.
மற்றொருவர், “எனது எளிய வேண்டுகோள் என்னவென்றால், சர்வர் டவுன் என்றால் பணப்பரிமாற்றத்தை நிறுத்திவிடுங்கள் அல்லது நேரடியாக Error என்று காட்டுங்கள். நாங்கள் பணபரிவர்த்தனை செய்யாமல் இருந்து விடுவோம். பெரிய தொகை செலுத்தும் போது இது சிக்கலாக மாறலாம் என்று கருத்து தெரிவித்தார். இன்னொருவர் ‘இனி கேஷ் இல்லாமல் UPI மட்டுமே நம்பி வெளியே செல்ல வேண்டாம்’ என்றார்.
UPI முறையிலான பண பரிவர்த்தனை கடந்த இரண்டு வாரங்களில் நடந்த 4வது தடையாகும். அதாவது 18 நாட்களில் இன்றுடன் சேர்ந்து 4 நாட்கள் செயல்படவில்லை.