விநாயகர் சிலையை எப்போது வாங்குவது? எந்த நேரத்தில் எப்படி வழிபடுவது?

By Sankar Velu

Published:

விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு 7.9.2024 அன்று சனிக்கிழமை வருகிறது. விக்கிரகம் வாங்குவது பலருக்கும் வழக்கம். இதற்கு இரு வகைக் காரணங்கள் உண்டு. ஒன்று அதை விக்கிறவங்க நல்லா இருக்கணும்.

களிமண்ணையே ஜீவாதாரமாகக் கொண்டு பொருட்களை செய்து விற்பவர்களுக்கு வருடம் முழுவதும் வேலை இருக்காது. முற்காலத்தில் களிமண் பானைகள் தயாராகி மக்கள் பயன்படுத்தினர். ஆனால் இன்று அப்படி வாங்குவதில்லை.

ஆனால் விநாயகர் சிலை மட்டும் வாங்குகிறார்கள். ஆறுகளில் மண் அரிப்பு ஏற்படும். அதனால் அங்கங்கே பள்ளம் ஏற்படும். அதை நிரப்புவதற்குத் தான் விநாயகர் சிலையை விஜர்சனம் செய்கிறார்கள். ஆறு, குளம், கிணறு, ஏரிகள் இல்லாதவர்கள் வீட்டில் ஒரு பூந்தொட்டிச் செடியில் போட்டு நிரப்பி அதன் மேல் பூச்செடியை வளர்க்கலாம்.

நமக்கு சவுகரியம் இருந்தால் கண்டிப்பாக நாம் அந்த மண் பிள்ளையாரை வாங்கலாம். இந்த ஆண்டு நமக்கு விநாயகர் சதுர்த்தி வெள்ளிக்கிழமை அன்றே ஆரம்பிக்கிறது. 6ம் தேதி மதியம் 1.48 மணி முதல் 7 மணி முதல் பிற்பகல் 3.38 மணி வரை சதுர்த்தி திதி உள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு மேல் பிள்ளையார் வாங்கலாம். சனிக்கிழமை காலை 7 மணி முதல் 8.50 மணி வரை வாங்கலாம். அல்லது அன்று காலை 10.35 மணி முதல் மதியம் 1.20 மணி வரை வாங்கலாம். அல்லது மாலை 6 மணிக்கு மேல் விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்யலாம். மாலை 3.30 மணி வரை தான் சதுர்த்தி நேரம் இருக்கு என யோசிக்க வேண்டாம்.

மாலையிலும் வழிபடலாம். 2 பழம் மட்டும் வைத்து நைவேத்தியம் வைத்து வழிபடலாம். மறுநாள் சனிக்கிழமை கொடுக்கப்பட்ட நேரத்தில் நைவேத்தியம் வைத்து வழிபடலாம். மாலை நேரத்தில் வழிபடுவது மிகவும் விசேஷம். ஞாயிற்றுக்கிழமை பிள்ளையார் சிலையை விஜர்சனம் செய்து கொள்ளலாம்.

vinayagar silai
vinayagar silai

3 நாள் வைத்து இருக்கலாம். அல்லது 5 நாள் வைத்து இருக்கலாம். ஞாயிறன்று விநாயகர் சிலையை மாலை 6 மணிக்குள் கரைக்க வேண்டும். ஆனால் 12 – 1.30 எம கண்டம். 4.30 – 6 ராகு காலம். இந்த நேரத்தைத் தவிர்க்க வேண்டும். திங்கள் ராகு 7 – 9.30 எம 10.30 – 12 தவிர்த்து விட்டு மாலை 6 மணிக்குள் கரைக்கலாம்.

2 வாழைப்பழம், வெத்தலைப்பாக்கு, அவல், பொரி கடலை, சர்க்கரை வைத்தாலே போதும். சர்க்கரைப்பொங்கல், மோதகம், சுண்டல், பழ வகைகள் வாங்கி வைத்து அர்ப்பணம் செய்யலாம். கொய்யாப்பழம், விளாம்பழம் வாங்கலாம். அருகம்புல் அர்ச்சனை. எருக்கம்பூமாலை வாங்கி வழிபடலாம்.

வேண்டியதை வேண்டிய வண்ணம் நமக்குத் தருவார் விநாயகர். கற்பக மரம் போல வாழ்க்கையை நமக்குத் தருவதால் தான் கற்பக விநாயகர் என்கிறோம். பொட்டுக்கடலை, சர்க்கரை இருந்தாலே போதும். மனமுருக பிரார்த்தனை பண்ணுங்க.

குழந்தைகளுக்கு நல்ல கல்வி, ஒழுக்கம், நிம்மதியான வாழ்க்கை, கடுமையான கிரகதோஷத்தில் இருந்து நீக்கம் இவை எல்லாவற்றையும் மனமுருக வேண்டும்போது பிள்ளையார் தருவார். விநாயகர் அகவல் இருக்கு. அவ்வையார் பாடிய அற்புதமான பதிகம். இதைப் பாராயணம் பண்ணி விநாயகரை வழிபாடு செய்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.