தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், முதல் தேர்தலிலே வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து முதலமைச்சர் ஆவார் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் அவரால் நிச்சயம் திமுகவை தோற்கடிக்க முடியும், எந்தக் கட்சியும் பெரும்பான்மை ஆட்சி பெறாமல் தொங்கு சபையை உருவாக்க முடியும் என்று பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு நடிகர் கட்சி ஆரம்பித்து ஒரே வருடத்தில் இவ்வளவு பெரிய மக்கள் வரவேற்பை பெற்றதை நான் இதுவரை பார்த்ததே இல்லை. விஜய்க்கே தெரியாமல் அவருக்கு ஆதரவு குவிந்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த ஆதரவு ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு போதாது என்றாலும், கண்டிப்பாக விஜய்யால் திமுகவை தோற்கடிக்க முடியும். திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்க முடியும்.
அது மட்டுமின்றி, தமிழக வரலாற்றில் முதல்முறையாக தொங்கு சட்டசபை ஏற்பட்டால், அதற்கு 100% விஜய் தான் காரணமாக இருப்பார் என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்த முறை தேர்தலுக்கு பின்னர் அதிமுக உள்பட சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து விஜய் ஆட்சியில் அமர்ந்தாலும் அல்லது எதிர்க்கட்சி வரிசையில் அமைந்தாலும், கண்டிப்பாக 2031 ஆம் ஆண்டில் விஜய் கட்சிதான் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும், விஜய் முதல்வர் ஆவார் என்றும் அவர் தெரிவித்தார்.
அதிமுக – திமுக என இரண்டு கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி செய்ய வேண்டும் என தமிழ்நாடு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதா? புதிதாக ஒருவர் வரட்டும், அவரது ஆட்சி எப்படி இருக்கிறது என்று 5 வருடங்கள் பார்ப்போம் என்று அவர் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்தார்.
இதுவரை தமிழகத்தை பொறுத்தவரை, நடிகர்கள் கட்சி தொடங்கி வெற்றி பெற்றதாக சரித்திரமே இல்லை. எம்ஜிஆர் வெற்றி பெற்றார் என்றால், அவர் ஏற்கனவே திமுகவிலிருந்து பிரபலமானதால் அவருக்கு வெற்றி கிடைத்தது. அதன் பிறகு அரசியல் கட்சி ஆரம்பித்த சிவாஜி கணேசன், விஜயகாந்த், சரத்குமார், கமல்ஹாசன், பாக்யராஜ், டி.ராஜேந்தர் உட்பட சில நடிகர்கள் கட்சி ஆரம்பித்து அவர்களால் வெற்றிக்கனியை பறிக்க முடியவில்லை.
ஆனால் விஜய் நிலைமை அப்படி அல்ல. அவர் ஐந்து வருடங்களுக்கு முன்பே திட்டமிட்டு, அடிப்படையில் ஆழமாக அஸ்திவாரம் போட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார் என்பதால், அவருக்கு முதல் தேர்தலில் வெற்றி கிடைக்காவிட்டாலும், கண்டிப்பாக அடுத்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்று அந்த பத்திரிகையாளர் தெரிவித்தார்.