கடந்த பத்து நாட்களாக சினிமா, ஐபிஎல் போட்டி என பல விஷயங்கள் நம்மைச் சுற்றி நடந்தாலும் குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரையில் அனைவரது கவனமும் தமிழக அரசியல் மீதுதான் இருந்து வருகிறது. விஜய் 107 தொகுதிகளை வென்று பெரும்பான்மையை நிரூபித்திருந்தாலும் ஆட்சி அமைப்பதற்கான வலு அவரிடம் இல்லாமல் இருந்தது.
எம்எல்ஏக்கள் இன்னும் அதிகம் பேர் வேண்டும் என்ற சூழலில் விஜய் முதல்வராக பதவி ஏற்பாரா அல்லது திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி சேர்ந்து புதிய ஒரு மாற்றத்தை உருவாக்குமா என மணிக்கு மணி பல பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறி கொண்டே இருந்தது. இறுதியில் திமுகவுடன் கூட்டணி அமைத்திருந்த சில கட்சிகள், விஜய் முதல்வராக வேண்டும் என்ற நோக்கத்தில் நிபந்தனைற்ற ஆதரவை கொடுத்து அவரை முதல்வராக பதவி ஏற்கவும் உதவி செய்திருந்தனர்.
உடைந்த அதிமுக?..
இதற்கு மத்தியில் விஜய் முதல்வராக பதவியேற்பு விழா நடந்த பின் பல்வேறு பரபரப்பான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்று நான்கு நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், சமீபத்தில் அதிக சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது அதிமுக கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது தான்.
முதல்வராகவும் பின்னர் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த எடப்பாடி பழனிசாமி, தற்போது கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். இவர் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க இருந்ததாகவும் அதன் பெயரில் அந்த கட்சியில் இருந்து எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் வேறு சில எம்எல்ஏக்கள் பிரிந்து முதல்வர் விஜயின் தவெக கட்சிக்கும் ஆதரவை தெரிவித்திருந்தனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி மிகவும் மனமடைந்து போக இந்த பிரச்சனை தான் கடந்த சில நாட்களாக அதிமுகவை சுற்றி நடந்து கொண்டிருக்கிறது.
4 நாள் தூங்கல..
இதற்கு மத்தியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நெருங்கிய தோழியும், அதிமுகவை ஆரம்பத்தில் கவனித்துக் கொண்டவருமான சசிகலா அதிமுக கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு தொடர்பாக சில கருத்துக்களை சமீபத்தில் தெரிவித்துள்ளார். “ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட கட்சி தற்போது ஒற்றுமை இல்லாமல் உள்ளது. அதிமுகவின் ஒற்றுமையை வலியுறுத்தி தான் இத்தனை நாட்கள் நான் பேசி வந்தேன். அதிமுகவில் பொறுப்பில் இருப்பவர்களுக்கு ஒற்றுமை முக்கியம் அதையே நான் விரும்புகிறேன்.
திமுகவுடன் கூட்டணி என்பது கனவில் கூட அதிமுகவினருக்கு வரக்கூடாது. அது தவறான விஷயம். அதிமுக – திமுக கூட்டணி பேச்சு என்ற செய்தியை கேட்டு நான்கு நாட்கள் எனக்கு தூக்கமே வரவில்லை” என சசிகலா சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் விஜய்யின் தவெக கட்சிக்கு ஆதரவு தெரிவித்த சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரையும் கட்சியில் இருந்து நீக்கியுள்ள தகவல், இன்னும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.

