2026 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள், கணிப்புகளையும் தாண்டி ஒரு தனிமனிதனின் அரசியல் ஆளுமை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை உலகிற்குப் பறைசாற்றியுள்ளன. தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்றே அடித்துக் கூறின.
பி-மார்க் , மேட்ரைஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் திமுக கூட்டணி 122 முதல் 132 இடங்களைப் பிடிக்கும் என ஆரூடம் கூறின. ஆனால், இந்த ஒருதலைப்பட்சமான கணிப்புகளைத் தகர்த்து, “எதிர்பாராததைத் தருவதே விஜய் ஸ்டைல்” என்பதை மெய்ப்பிக்கும் வகையில் முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினே தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் பின்னடைவை சந்திப்பார் என்று எந்த ஒரு ஊடகமாவது கனவில் நினைத்திருக்குமா?. ஆரம்பத்திலிருந்தே ஊடகங்கள் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை வெறும் ‘வாக்குகளைப் பிரிக்கும்’ கட்சியாகவே சித்தரித்தன. ஆனால், ஒரே ஒரு நிறுவனம் மட்டும்—ஆக்சிஸ் மை இந்தியா தனது கணிப்பில் தவெக 98 முதல் 120 இடங்கள் வரை வெல்லும் என்று துணிச்சலாகக் குறிப்பிட்டது.
அந்த கணிப்பை கேலி செய்தவர்கள் முன்னால், இன்று தவெக 108 தொகுதிகளில் முன்னிலை வகித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. விஜய்யின் இந்த வெற்றி என்பது திராவிட அரசியலின் 50 ஆண்டுகால வரலாற்றை மாற்றியமைத்த ஒரு நிலநடுக்கமாகும். திமுகவின் “திராவிட மாடல்” ஆட்சிக்கு எதிராக மக்கள் ஒரு அமைதி புரட்சியை நிகழ்த்தியுள்ளனர் என்பதை மற்ற ஊடகங்கள் கவனிக்கத் தவறிவிட்டன.
தவெக-வின் வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் பின்தங்கியுள்ளது என்பது தமிழக அரசியலின் மிகப்பெரிய அதிர்வலையாக மாறியுள்ளது. எந்தவொரு ஊடகமும் தராமல் போன அந்த ‘எதிர்பாராத திருப்பத்தை’ மக்கள் இன்று நேரடியாக கொடுத்துள்ளனர். மற்ற நிறுவனங்களின் கணிப்புகள் திமுகவிற்கு சாதகமாக இருந்த நிலையில், ஆக்சிஸ் மை இந்தியா மட்டுமே தமிழகத்தில் நிலவிய ஆழமான மாற்றத்திற்கான வேட்கையை சரியாகப் படம் பிடித்துக் காட்டியது.
. ஒரு சினிமா நட்சத்திரமாகத் தொடங்கி, கட்சி ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளிலேயே கோட்டையை கைப்பற்றும் நிலைக்கு வந்துள்ளது விஜய்யின் அசுர வளர்ச்சியை காட்டுகிறது. இறுதியாக, 2026 தேர்தல் முடிவுகள் விஜய்யை ஒரு “ஜன நாயகனாக” மாற்றியுள்ளன. ஒரு பெரும் சுனாமியை முன்கூட்டியே கணிக்கத் தவறிய மற்ற ஊடகங்கள் இப்போது வாயடைத்துப் போயுள்ளன.
“அமைதியா இருப்போம்… முடிவுகளின் மூலம் பேசுவோம்” என்ற விஜய்யின் பாணியே இன்று அவரைத் தமிழகத்தின் அதிகார மையத்தை நோக்கி அழைத்துச் சென்றுள்ளது. 39 கட்சிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும், தவறான கணிப்புகளையும் தாண்டி விஜய் நிகழ்த்தியுள்ள இந்த வெற்றி, தமிழகத்தின் புதிய விடியலாகக் கொண்டாடப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
