19 வருடத்திற்கு பொள்ளாச்சி வந்தாரா புதிய போப்பாண்டவர்.. வைரல் புகைப்படம்..!

  ரோமன் கத்தோலிக்க மதத்தின் தலைவர் போப்பாண்டவர் லியோ அவர்கள், தமிழகத்தில் உள்ள பொள்ளாச்சியில் அமைந்துள்ள செண்பகம் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிக்கு, 2006ஆம் ஆண்டு அக்டோபரில் வந்தார். அப்போது அவருக்கு வயது 50. அவர்…

pope

 

ரோமன் கத்தோலிக்க மதத்தின் தலைவர் போப்பாண்டவர் லியோ அவர்கள், தமிழகத்தில் உள்ள பொள்ளாச்சியில் அமைந்துள்ள செண்பகம் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிக்கு, 2006ஆம் ஆண்டு அக்டோபரில் வந்தார். அப்போது அவருக்கு வயது 50. அவர் பெயர் ஃபாதர் ராபர்ட் பிரெவோஸ்ட். அப்போது அவர் “ஆர்டர் ஆஃப் செயிண்ட் ஆகஸ்டின்” எனப்படும் கிறிஸ்தவ அமைப்பின் தலைவராக இருந்தார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

இந்த புகைப்படம் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ராஜ்ய சபா எம்.பி டெரெக் ஓ’பிரையன் இதனை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியபோது, ‘இப்போது போப்பாண்டவர் ஆகியிருக்கும் ராபர்ட் பிரெவோஸ்ட், 19 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்கு வந்தார். அவர் செண்பகம் மெட்ரிகுலேசன் பள்ளியில் மாணவர்களை சந்தித்தார். அந்த பள்ளி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் உள்ளது’ என கூறியுள்ளார்.

ஃபாதர் பிரெவோஸ்ட் அவர்கள் 2001 முதல் 2013 வரை ஆர்டர் ஆஃப் செயிண்ட் ஆகஸ்டின் உலகத் தலைவராக இருந்தார். அந்த சமயத்தில் 2004 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை இந்தியாவுக்கு வந்தார். அவர் அந்த நேரத்தில் கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்தார்.

பின் அவர் 2013-இல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ஆகஸ்டினியர் பிராந்தியத்திற்கு திரும்பினார். அங்கு பல பொறுப்புகளை வகித்தார். பிறகு, 2014 நவம்பரில் போப் பிரான்சிஸ் அவரை பெரு நாட்டின் சிக்லாயோ மறைமாவட்டத்திற்கான நிர்வாகத் தலைவராக நியமித்தார்.

போப்பாண்டவர் லியோ குறித்து பொள்ளாச்சி பள்ளியின் நிர்வாகி ஒருவர் கூறியபோது “அவர் மிகவும் எளிமையானவர். பள்ளியில் மாணவர்களுக்கு ஊக்கம் அளித்தார்” என்றார். அதேபோல் ஃபாதர் யேசுதாசன் கூறுகையில், “அவர் எங்களுடைய பள்ளிக்கு வந்தது எங்களுக்கு பெருமையான தருணம்” என்று தெரிவித்துள்ளார்.