தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய அந்த சில மணிநேரங்கள், ஒரு திரில்லர் திரைப்படத்திற்கு இணையான அரசியல் திருப்பங்களை கொண்டிருந்தன. குறிப்பாக, தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், ஆட்சியமைப்பதை தடுக்க திமுக தரப்பில் இருந்து போடப்பட்ட திரைமறைவு திட்டங்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வர தொடங்கியுள்ளன.
தவெகவின் வெற்றியை தடுத்து நிறுத்த, பரம எதிரியான அதிமுகவுடன் கைகோர்க்கவும் திமுக தயங்கவில்லை என்பதுதான் இதில் ஆச்சரியமான விஷயம். ஆரம்பத்தில், அதிமுக – திமுக மெகா கூட்டணியை உருவாக்கி, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக முன்மொழிய திமுக தரப்பு ரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தியது. ஆனால், பல தசாப்தங்களாக திராவிட அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்த இந்த இரு கட்சிகளும் இணைவதை மக்கள் கடுமையாக எதிர்ப்பார்கள் என்ற அச்சம் எழுந்ததால், அந்த திட்டம் அடுத்த இரண்டு நாட்களிலேயே கைவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ‘தலித் முதல்வர்’ என்ற அஸ்திரத்தை ஏந்தி புதிய வியூகம் ஒன்றை திமுக வகுத்தது. விசிக தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக அறிவித்தால் மக்கள் மத்தியில் எதிர்ப்பு இருக்காது என்றும், தவெகவின் எழுச்சியை ஒடுக்க இதுவே சரியான வழி என்றும் திமுக அவரை முன்மொழிந்தது. இந்த திட்டத்திற்குத் திருமாவளவனும் ஆரம்பத்தில் சம்மதம் தெரிவித்தார். இதன் காரணமாகவே, ஒரு குறிப்பிட்ட நாளில் இரவு 7 மணி முதல் அவர் தனது அலைபேசியை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தவெக அழைப்புகளை தவிர்த்தார். தவெக தரப்பில் இருந்து அவரை தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் கிடைக்கவில்லை. அதே நேரத்தில், விசிகவின் மற்ற தலைவர்கள் “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு” என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி, ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கான முன்னோட்டத்தை காட்டினர்.
இருப்பினும், திமுகவின் இந்த “திருமா முதல்வர்” திட்டத்திற்கு அதிமுகவின் ஒரு பிரிவினர், குறிப்பாக சி.வி.சண்முகம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கொள்கை ரீதியாகவும், தேர்தல் கள எதார்த்தங்களின் படியும் விசிக தலைமையிலான ஆட்சியை ஏற்பது தற்கொலைக்கு சமம் என்று அவர்கள் வாதிட்டனர். இதனால் திமுகவின் இரண்டாவது திட்டமும் தோல்வியில் முடிந்தது. எடப்பாடியை முதல்வராக்க எடுத்த முயற்சியும், திருமாவளவனை முதல்வராக்க போட்ட கணக்கும் அடுத்தடுத்து புட்டுகிட்ட நிலையில், அரசியல் களம் மீண்டும் தவெகவின் பக்கம் திரும்பியது. வேறு வழியில்லாத சூழலில், திருமாவளவன் மீண்டும் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்த துவங்கினார்.
மறுநாள் காலையில் மீண்டும் தவெக-வுடன் பேச ஆரம்பித்த திருமாவளவன், ஆரம்பத்தில் சில கடுமையான நிபந்தனைகளை விதித்தார். அமைச்சரவையில் முக்கிய துறைகள் மற்றும் அதிகார பகிர்வு போன்ற கோரிக்கைகளை முன்வைத்தார். ஆனால், அதே நேரத்தில் அதிமுகவிற்குள் ஒரு மிகப்பெரிய பூகம்பம் வெடித்தது. எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதமான போக்கிற்கு எதிராக சி.வி.சண்முகம் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவிற்கு ஆதரவு அளிக்கத் தயார் என்ற செய்தியை பரப்பினர். தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்க அதிமுகவின் ஒரு அணியே முன்வந்ததால், விசிகவின் நிபந்தனைகளுக்கு பணிய வேண்டிய அவசியம் தவெக தலைமைக்கு இல்லாமல் போனது.
இந்த திடீர் மாற்றத்தை உணர்ந்த திருமாவளவன், தனது அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, நிபந்தனைகள் எதையும் விதிக்காமல் தவெகவிற்கு தனது முழு ஆதரவை வழங்க முன்வந்தார். எடப்பாடியையும் திருமாவையும் முன்னிறுத்தி தவெகவை ஓரங்கட்ட நினைத்த திமுகவின் சதுரங்க ஆட்டம், இறுதியில் தவெகவின் கரங்களையே வலுப்படுத்தியது. அந்த பரபரப்பான சில மணிநேரங்களில் நடந்த அதிகார போட்டி, இறுதியில் “மக்களின் முதல்வர் விஜய்” என்ற ஒற்றை புள்ளியில் வந்து நின்றது. இந்த அரசியல் சதுரங்கத்தில் திமுகவும் விசிகவும் போட்ட கணக்குகள் தவிடுபொடியாகி, தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் சகாப்தம் பிறந்தது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
