இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பை இன்று மாலை தனது இன்ஸ்டாகிராம் வழியாக வெளியிட்டுள்ளார். அவர் தனது டெஸ்ட் கேப்புடன் கூடிய தகவலை சுருக்கமாக தெரிவித்து இனிமேல் வெள்ளை ஆடையில் விளையாட மாட்டேன் என தெரிவித்தார்.
அவர் செய்தியை வெளியிட்ட நேரம் மாலை 7:29 மணி. இதே நேரத்தில் தான் தோனி தனது ஓய்வை 2020 ஆகஸ்ட் 15ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் “1929 மணி நேரத்திலிருந்து என்னை ஓய்வு பெற்றவர் எனக் கருதுங்கள்” என்று பதிவு செய்திருந்தார்.
தோனி மற்றும் ரோஹித் இருவரின் டெஸ்ட் வாழ்க்கையிலும் பல ஒற்றுமைகள் உள்ளன. இருவரும் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தங்கள் கடைசி வெளிநாட்டு டெஸ்டை, மற்றும் மும்பையின் வான்கடே ஸ்டேடியத்தில் கடைசி இந்திய டெஸ்டை ஆடியுள்ளனர்.
ரோஹித் தனது ஓய்வு குறித்து கூறிய போது, ‘எல்லாருக்கும் வணக்கம்! நான் இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இந்தியா சார்பில் வெள்ளை ஜெர்சியில் விளையாடியது ஒரு பெரிய மரியாதையாக இருந்தது. உங்கள் அன்பும் ஆதரவுக்கும் நன்றி. ஆனால், ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக தொடர்ந்து விளையாடுவேன்.” என்றார்.
எனவே ரோஹித் தனது டெஸ்ட் வாழ்க்கையை முடிக்கிறார். 2013ல் மே.இ.தீவுகளில் நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி, முதல் போட்டியில் சதம் அடித்தவர். மொத்தமாக 67 டெஸ்ட் போட்டிகளில் 4,301 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 12 சதங்கள் மற்றும் 18 அரைசதங்கள் பதிவு செய்துள்ளார். 24 போட்டிகளில் கேப்டனாக இருந்து 12 வெற்றி, 9 தோல்விகள் பெற்றுள்ளார்.
2024 ஜூன் மாதத்தில், இந்தியா தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, ரோஹித் டி20 போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார்.
தற்போது, ரோஹித் டெஸ்ட் ஓய்வும் அறிவித்துள்ளதால், புதிய டெஸ்ட் கேப்டனாக 25 வயதான சுப்மன் கில் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தற்போது ஐபிஎல் 2025 புள்ளிப் பட்டியலில் முதலிடம் வகிக்கும் குஜராத் டைட்டன்ஸுக்கு கேப்டனாக இருக்கிறார்.
அஜித் அகார்கர் தலைமையிலான தேர்வுக்குழு, இந்திய டெஸ்ட் அணியில் புதிய வீரர்களை கொண்டு வர திட்டமிட்டு வருகின்றது.