இறைவனுக்கு அர்ச்சனை செய்வதில் பலருக்கும் குழப்பம் இருக்கும். நம்ம பெயரில் பண்ணனுமா, கடவுள் பெயரில் பண்ணனுமான்னு. நமக்கு தேவைகள் எதுவும் இருந்தால் உங்க பெயரில் பண்ணுங்க. தேவை எதுவும் இல்லைன்னா கடவுள் பெயரில் பண்ணுங்க. அர்ச்சனை யார் பெயரில் பண்ணினாலும் அதற்கான பொருள்கள் ஒண்ணுதான். தேங்காய், வாழைப்பழம், வெத்தலைப்பாக்கு இவை அர்ச்சனைக்கு மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
இதற்கு மேல் கடவுளுக்கு நைவேத்தியம்னு ஏதாவது வைக்கணும்னு வைத்தார்களான்னு சிலருக்கு சந்தேகம் வந்தது. அர்ச்சனை தேங்காயில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தென்னைமத்தில் இருந்து மட்டையோடு தேங்காய் வருகிறது. முதலில் மட்டை இருக்கும். அதன்பிறகு நார் இருக்கும். அதன்பிறகு ஓடு இருக்கும். அதை உடைத்தால் தான் வெள்ளையான சுவையான பகுதியும், சுவையான தண்ணீரும் கிடைக்கும்.
இந்த 3 ஓடுகளும் ஆணவம், கன்மம், மாயா மலங்களைக் குறிக்கிறது. தேங்காய் தண்ணீர் பக்தி என்ற வெள்ளம், வெள்ளையா இருக்குற பருப்பு தான் நம் மனம். ஆத்மா. அது எப்பவுமே வெண்மையா, தூய்மையா இருக்கணும்னு தான் தேங்காய் உடைக்கப்படுகிறது. கோவிலுக்கு வரும்போதே 2 மலம் போயிடும். கன்மம், மாயாமலங்கள் நீக்கி விடுகிறோம். கோவிலில் வைத்து தான் ஆணவம் என்ற மலத்தை நீக்குகிறோம். தேங்காய் 3 கண்கள் உடையதாக இருக்கும். அதனால்தான் சிவசொரூபமாகக் கருதப்படுகிறது. கோவில் அர்ச்சகர் கொஞ்சமாக இருந்த குடுமியையும் எடுத்துடுவார்.
3வது கண்ணை மறைத்து வைத்திருந்த மலங்களின் எச்சமான நாரையும் அகற்றி விட்டால் அந்த 3 கண்களும் தெய்வ சன்னதியில் எப்படி வழிபடுகிறதோ அதுபோல நாம் நம்முடைய மலங்கள் நீங்கி தெய்வத்திடம் சென்று முழுமையாக சரணாகதி அடைந்து விடுகிறோம். அப்போது நமக்குள் இருக்கும் அகக்கண்ணாகிய அந்த மூன்றாவது கண்ணும் வெளிப்படும் என்ற தத்துவம் உணரப்படும்.
தேங்காய் உடைக்கும்போது அதை வெறும் தேங்காயாக பாவிக்கக்கூடாது. அதை நம் மனமாகப் பாவிக்க வேண்டும். தேங்காய் அழுகி இருந்தால் அதைப் பற்றி கவலைப்படாதீங்க. கஷ்டப்படாதீங்க. அதனால ஏதாவது பிரச்சனை வருமான்னு யோசிக்காதீங்க. எல்லாவற்றையும் இறைவன் சிறப்பாகத்தான் படைத்தான். அதுல ஒருசில படைப்புகளில் இயற்கையோட மாற்றத்தால் அழுகிப் போகிறது.
அதனால இந்தப் பிரச்சனையால இப்படி ஆகிடுச்சுன்னு மனசைப் போட்டுக் குழப்புவதை விட்டுவிட்டு அந்த வேலையை எப்படி நல்லா முடிக்கலாம்னு திறம்பட நாம யோசிக்கலாம். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.