மனம் பக்குவப்பட என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

மனம் ஒரு குரங்குன்னு சொல்வாங்க. ஆனா அதை நாம அடக்க முடியாம எவ்ளோ திணறுறோம். ஆனா அதுக்கும் ஒரு வழி இருக்கு. என்னன்னு பார்க்கலாமா… தெய்வீகம் என்பது இந்த உலகத்தார் தேடுவது போல நமக்கு…

மனம் ஒரு குரங்குன்னு சொல்வாங்க. ஆனா அதை நாம அடக்க முடியாம எவ்ளோ திணறுறோம். ஆனா அதுக்கும் ஒரு வழி இருக்கு. என்னன்னு பார்க்கலாமா…

தெய்வீகம் என்பது இந்த உலகத்தார் தேடுவது போல நமக்கு அன்னியமாக புறவுலகில் இல்லை. புறவுலகத் தேடல் என்பது மனதை செம்மைப்படுத்தும் ஒரு வகை யுக்திகளே. தெய்வீகம் என்பது நமக்கு வெளியே அன்னியமான ஒன்றாக இருந்து, பிறகு நம்மிடம் வந்து சேர்வதல்ல. நமக்கு அன்னியமான ஒன்றை நாம் சேர்கிறோம் என்றால், ஒருநாள் இல்லை ஒரு நாள் மீண்டும் அதை விட்டு நாம் பிரிந்து விட வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது.

ஒரு இரும்பைத் தீயில் வைத்தால் அது தீ போல ஆகி விடுகின்றது. தீ போல இருப்பது அதன் சொந்த நிலையன்று. தீயை விட்டு வெளியே எடுத்து விட்டால் சற்று நேரத்திற்கெல்லாம் அது பழையபடி இரும்பாகத் தோற்றமளிக்கும். ஆனால், சிக்கிமுக்கிக் கல்லை ஆராய்ந்து பார்த்தால் அது வெகு நாட்களாகக் கடலுக்குள் கிடந்தாலும், அதை எடுத்து ஒன்றை ஒன்று உரசினால் தீப்பொறி கிளம்பும்.

தீயை உருவாக்கும் தன்மை அந்தக் கல்லுக்குள் இருக்கிறது. அந்தத் தன்மை அதிலிருந்து பிரிந்து போகக் கூடியது அல்ல. அது போலவே தெய்வீகமும் மனிதனின் சொந்தத் தன்மையாக உள்ளது. வேறு ஒருவரோ அல்லது நீங்களே நினைத்தால் கூட தெய்வீகத்தை உங்களிடமிருந்து பிரிக்க முடியாது. சூக்குமமாக மறைந்திருக்கும் அந்நிலையை உணர்வுக்கு அல்லது தோற்றத்துக்குக் கொண்டு வருவது முயற்சியின் விளைவே.

சூரியனிடம் வெப்பமும், ஒளியும் குவிந்து கிடக்கின்றன. சூரியனிலிருந்து அவை நாலா பக்கமும் விரிவடைகின்றன. அது போல மனிதனின் எண்ணங்கள் எல்லாம் அவன் உறங்கும் பொழுது சித்தத்தில் ஒடுங்கிக் குவிந்து கிடக்கின்றன. மீண்டும் அவன் விழித்தெழுந்து செயல்பட ஆரம்பிக்கும் பொழுது ஒவ்வொன்றாக விரிவடைகின்றன.

அப்படிப்பட்ட எண்ணங்களின் விரிவடைதலையே நாம் வாழ்க்கை என்கிறோம். இந்த உண்மை அறிவுக்குப் புலப்படும் பொழுது அதாவது நமது சொந்த இயல்பான தெய்வீகமானது விரிதலற்று ஒடுங்கிக் குவிந்திருக்கும் நிலையே என்பது உணர்வுக்கு வருகிறது. அப்பொழுதுதான் நான் ப்ரம்மம் என்பது உங்களுக்குத் தெரியும். அது வரையில் ‘நான் பிரம்மம்’ என்கிற மஹா வாக்கியம் வெறும் கேள்வி ஞானமாகவே இருக்கும்.

எண்ணங்களை அதன் பிறப்பிடமான சித்தத்தில் ஒடுக்க வல்லானுக்கு நான் பிரம்மம் என்ற உண்மையைத் தவிர வேறு எந்தவித உணர்வும் இருக்காது. தன்னைப் பற்றியே தான் அறியாது உழலும் மனது எல்லாம் அறிந்த, எல்லாவற்றிற்கும் மூலமான பிரம்மத்தை எவ்வாறு அறியும் ? முதலில் தன்னைத் தான் அறிந்து நல்ல மனிதனாக வாழ வேண்டும். அப்பொழுதுதான் பிரம்மத்தை அறியும் வகைக்கு மனம் பக்குவப்படும்.