2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் எதுவாக இருந்தாலும், அந்த தீர்ப்பின் மையப்புள்ளியாகவும், வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாகவும் நடிகர் விஜய் மட்டுமே இருப்பார் என்பது தற்போதைய அரசியல் எதார்த்தமாகியுள்ளது.
அதிமுக அல்லது திமுக என இதில் யார் வெற்றி பெற்றாலும் அல்லது யார் தோல்வியை தழுவினாலும், அதற்கான பின்னணி காரணியாக விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் பிரிக்கும் வாக்குகளே இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.
ஒருவேளை பாரம்பரியமிக்க இந்த இரு திராவிடக் கட்சிகளுமே பின்னடைவை சந்திக்கும் சூழல் உருவானால், அதுவும் விஜய்யின் அரசியல் எழுச்சியால் ஏற்பட்ட ஒரு மாபெரும் மாற்றமாகவே கருதப்படும். சந்தேகத்திற்கு இடமின்றி, வரப்போகும் தேர்தலின் ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ அந்தஸ்தை விஜய் இப்போதே பெற்றுவிட்டார்.
தமிழக அரசியலில் ஐம்பது ஆண்டுகாலமாக நிலைபெற்றுள்ள இருமுனை போட்டியை அவர் ஆளுங்கட்சியின் அதிருப்தி வாக்குகளையும், எதிர்க்கட்சியின் உறுதிமிக்க வாக்குகளையும் ஒரே நேரத்தில் ஈர்க்கும் காந்தமாக உருவெடுத்துள்ளார். இதனால் பெரிய கட்சிகள் தங்களின் கோட்டைகள் சரிந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளன. விஜய்யைப் பார்த்து பெரிய கட்சிகள் மட்டுமல்லாமல், இதுவரை செல்வாக்குடன் இருந்த சிறிய கட்சிகளும் தங்கள் இருப்பு கேள்விக்குறியாகிவிடுமோ என்று பயந்து நடுங்குவதுதான் ‘தளபதி’யின் உண்மையான அரசியல் பவர்.
சின்னஞ்சிறிய கட்சிகள் கூட விஜய்யின் வருகையால் தங்களின் ‘பேரம் பேசும்’ சக்தியை இழந்துவிடுவோம் என்று அஞ்சுகின்றன. இதுவரை கூட்டணி கணக்குகளில் முக்கியத்துவம் பெற்று வந்த கட்சிகள், விஜய்யின் வருகையால் ஓரங்கட்டப்படும் சூழல் உருவாகியுள்ளது.
விஜய்யின் கட்சி தனித்து போட்டியிட்டாலும் அல்லது ஒரு புதிய கூட்டணியை உருவாக்கினாலும், அது வாக்கு சதவீதத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, நடுநிலை வாக்குகளும் ஜாதி, மத அடையாளங்களை கடந்த வாக்குகளும் விஜய்யை நோக்கி நகர்வது மற்ற கட்சிகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இறுதியாக, 2026 தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்திற்கான களமல்ல, அது ஒரு புதிய அரசியல் யுகத்தின் தொடக்கமாக இருக்கும். பெட்டிகள் திறக்கப்படும்போது வெற்றி யாருக்கு என்பது ஒருபுறம் இருந்தாலும், ஒட்டுமொத்த தேர்தல் களத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் விஜய்யாகவே இருப்பார் என்பதில் ஐயமில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
