பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா நடத்திய விமானப்படை தாக்குதலில், இந்தியாவுக்கு எந்தவொரு உயிர் அல்லது உபகரண சேதம் ஏற்படவில்லை என இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. இது பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படை பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் என மொத்தம் 9 இடங்களில் இன்று அதிகாலை அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில், பல பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. முக்கியமாக, தாக்குதல்களில் எந்த ஒரு பாகிஸ்தான் ராணுவ முகாம்களும் குறிவைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களில் மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தானே அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது. இது மிக முக்கியமான ஒரு பரிணாமமாக பார்க்கப்படுகிறது.
இந்த தாக்குதலுக்குப் பிறகு, இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளதாவது: சிறிது நேரத்துக்கு முன், இந்திய ஆயுதப்படைகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையை தொடங்கின. இதில், இந்தியா மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்ட மற்றும் இயக்கப்பட்ட பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன. பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம் என மொத்தம் 9 இடங்களில் தாக்கப்பட்டுள்ளன.
இந்திய நடவடிக்கைகள் கட்டுப்பாட்டுடன், நேர்த்தியாக நடத்தப்பட்டன. பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் எதுவும் தாக்கப்படவில்லை. நாங்கள் இலக்குகளை மிகுந்த பொறுப்புடனும் சீரான முறையிலும் தேர்ந்தெடுத்தோம்.
“பஹல்காமில் நடைபெற்ற கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பானவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்போம் என்ற நம்முடைய உறுதியை செயல்படுத்தும் வகையில் இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கையை பற்றிய விரிவான செய்தியறிக்கை இன்று பிற்பகலில் வெளியிடப்படும், என இந்திய பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.