பாகிஸ்தானுக்கு எதிரான மிக முக்கியமான பதிலடி நடவடிக்கையாக, இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் ஒரு வலுவான தாக்குதலை நடத்தியது. இந்த நடவடிக்கையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் இலக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன.
இன்று அதிகாலை இந்த தாக்குதல்கள் இடம்பெற்றன. பாகிஸ்தான் இந்த தாக்குதலுக்கு தயாராக இல்லை என தகவல்கள் கூறுகின்றன.
இந்திய அரசு ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில், “இந்த தாக்குதல் மிகவும் திட்டமிடப்பட்டதாகவும், அளவோடு நடந்ததாகவும், யுத்தத்தை தூண்டும் வகையில் இல்லாததாகவும் இருக்கிறது. பாகிஸ்தான் ராணுவ தளங்கள் எதுவும் தாக்கப்படவில்லை. இந்தியா மிகவும் பொறுமையுடன் இலக்குகளைத் தேர்ந்தெடுத்துள்ளது” என தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல், இந்தியாவை குறிவைத்து தீவிரவாதிகள் திட்டமிட்ட தாக்குதல்களுக்கு எதிரான நடவடிக்கையாகவே மேற்கொள்ளப்பட்டது எனவும் அரசு உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் தகவல்கள் பின்னர் பகிரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தி வெளியானதும் நாடெங்கும் மக்களிடையே பெரும் ஆதரவும், பெருமையும் காணப்பட்டது. சமூக ஊடகங்களில் இந்திய இராணுவத்திற்கு பாராட்டுகளும், “ஜெய் ஹிந்த்” போன்ற நம்ம நாட்டை கௌரவிக்கும் வாசகங்களும் பரவலாக பகிரப்பட்டன.
ஒரு நபர் X பக்கத்தில், “இனி அமைதியை குலைப்பவர்களுக்கு இந்தியா அமைதி காட்டாது. சிந்தூர் நடவடிக்கை, நீதி கிடைத்தது. ஜெய் ஹிந்த்!” என பதிவிட்டுள்ளார்.
அதேபோல் இன்னொரு நபர், ‘மோடியிடம் சொல் என்றா சொன்னாய்? மோடியிடம் சொல்லிவிட்டேன், இந்த தாக்குதல் போதுமா? இன்னும் வேணுமா? என்ற மீம்ஸை பதிவு செய்திருந்தார்.
மஹாராஷ்டிராவின் புனேயில் உள்ள மக்கள், இந்த தாக்குதலை கொண்டாடும் வகையில் இரவில் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ச்சி கொண்டாடினர்.
இந்த தாக்குதலை பற்றிய கருத்துகளை சத்குரு உட்பட பல பிரபலங்கள் பகிர்ந்துள்ளனர். சத்குரு X பக்கத்தில், “எங்கள் வீரர்களுக்கு பாதுகாப்பும் வெற்றியும் அமைய வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், சிவகார்த்திகேயன் ஆகியோர்கள் சமூக ஊடகங்களில் இந்திய ராணுவத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
பஹல்காம் பகுதியில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், இந்த பதிலடி நடவடிக்கைக்கு இந்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.