பாகிஸ்தான் அரசியல்வாதி ஷேர் அப்சல் கான் மார்வத் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்தியாவுடன் போர் வந்தால் என்ன செய்வீர்கள் என கேட்கப்பட்டபோது அவர், “போர் வந்தால் நான் இங்கிலாந்துக்கு தப்பித்து போய்விடுவேன்” என்று சிரித்து கொண்டே பதிலளித்தார். இந்த பதில் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் அரசியல்வாதிகள் கூட தங்கள் ராணுவத்தில் நம்பிக்கை வைக்கவில்லை என நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.
அதே பேட்டியில் “மோடி என் அத்தை மகனா? நான் சொன்னால் போரை நிறுத்திவிடுவாரா? என நீங்கள் போரை நிறுத்த முயற்சிப்பீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்தார்.
மார்வத், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சியான பாகிஸ்தான் தெரீக்-இ-இன்சாஃப் உறுப்பினர். ஆனால் சொந்த கட்சியையே தொடர்ந்து விமர்சித்ததால் முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷேர் அஃப்சல் கான் மார்வத் மட்டுமின்றி பாகிஸ்தானின் பெரும்பாலான அரசியல்வாதிகளின் மனநிலை போர் வந்தால் நாட்டை விட்டு வெளியேறி குடும்பத்துடன் பாதுகாப்பாக வெளிநாட்டுக்கு சென்றுவிட வேண்டும் என்று தான் இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியா பாகிஸ்தான் போர் மூண்டால் அதிகபட்சம் நான்கு நாட்களுக்கு கூட பாகிஸ்தான் தாக்கு பிடிக்காது என்றும் பாகிஸ்தான் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது சரணடைய வேண்டும் என்ற நிலை தான் ஏற்படும் என்றும் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். எனவே தான் இந்தியா உடனான போரில் பாகிஸ்தான் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்பதால் பாகிஸ்தான் அரசியல்வாதிகள் தங்கள் பாதுகாப்பை தேடிக்கொள்ள முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது