பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் என்ற செய்தி சேனலுக்கு பேட்டி அளித்த அவர், “நாங்கள் இதுவரை அமைதியாக இருந்தோம். ஆனால் சும்மா இருந்தால் எங்களால் முடியவில்லை என்று நினைக்க கூடாது. அதனால் தான் பதிலடி கொடுத்தோம். ஆனால் இப்போது அவர்கள் நிறுத்தினால் நாங்களும் நிறுத்துவது குறித்து சிந்திக்கலாம்,” என்றார்.
இது, அவர் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோவுடன் பேசிக் கொண்டதற்கு பிறகு வந்த கருத்தாகும். அப்போது அவர், “இந்தியா அடக்கமாக நடந்து கொண்டால் நாங்களும் அமைதிக்கு தயாராக இருக்கலாம்” என்று அமெரிக்காவுக்கு தெரிவித்தார்.
இருப்பினும், தார் மேலும் எச்சரிக்கை அளித்தார்: “இந்தியா மறுபடியும் தாக்கினால், நாங்களும் பதில் கொடுப்போம்” என்றார்.
இந்தியா–பாகிஸ்தான் நாடுகள் இரண்டும் அணு ஆயுதம் கொண்ட நாடுகள் என்பதால், இவ்வகை பதிலடிகள் உலக நாடுகளில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலுக்கு பிறகே இந்த பதற்றம் உருவானது.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத குழுக்கள் தான் காரணம் என இந்தியா குற்றம் சாட்டியது. அதன்பிறகு, “சிந்தூரா ஆபரேஷன்” என்ற பெயரில் இந்தியா குறிவைத்த தாக்குதல்களை நடத்தியது.
இதே சனிக்கிழமை, பாகிஸ்தான் ஊடகங்கள், இந்தியா பாகிஸ்தானின் மூன்று விமான தளங்களை டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளால் தாக்கியது என கூறின. ஆனால் டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்திய அதிகாரிகள் இந்த தகவல் பொய்யானது என்று கண்டித்தனர்.
இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “இது பாகிஸ்தானின் பொய் தகவல். அப்படியே மக்கள் மத்தியில் பயம் ஏற்படுத்தும் முயற்சி என்றார். பாதுகாப்புத்துறை அதிகாரிகள், இந்திய விமான தளங்கள் பாதுகாப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை உறுதி செய்ய, நேரம் குறிக்கப்பட்ட வீடியோக்களையும் வெளியிட்டனர்.
இந்திய ராணுவ அதிகாரியான கர்னல் சோஃபியா குரேஷி, “பாகிஸ்தான் ஜம்மு & காஷ்மீரில் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளை குறிவைத்து தாக்கியுள்ளது. அதற்கும் நாங்கள் கண்ணியமான, தக்க பதிலை கொடுத்துவிட்டோம்,” என்றார்.
அதேபோல், இந்திய விமானப்படை அதிகாரி விங் கமாண்டர் வியோமிகா சிங், “இந்தியா சண்டையை மேலும் பெருக்க விரும்பவில்லை. ஆனால், பாகிஸ்தான் எல்லை அருகே அதிக படைகள் குவிக்கிறது. அதனால் எதையும் எதிர்கொள்வதற்கு தயாராக நம்முடைய படைகள் முழு விழிப்புடன் உள்ளன,” என்றார்.
இதற்கிடையில், உலக நாடுகளும் இரு நாடுகளுக்கு அழுத்தம் தரத் தொடங்கியுள்ளன. அமெரிக்க வெளியுறவு செயலாளர் ரூபியோ, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேசினார். இரு நாடுகளும் நேரடியாக பேச தொடங்க வேண்டும் என்றும், தவறான கணிப்புகள் வராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். எதிர்காலத்தில் சமாதான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா உதவ தயாராக இருக்கிறது என்றும் கூறினார்.
இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப், தேசிய கட்டுப்பாட்டு அதிகார சபையை கூட்டி ஆலோசனை நடத்தினார். இந்த குழு, பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் பாதுகாப்பு திட்டங்களை கவனிக்கும் முக்கிய அமைப்பாகும்.
இந்நிலையில், பாகிஸ்தான் தற்போது தங்கள் போர் நிலைப்பாட்டை குறைத்துவிட்டதா? அல்லது இது வெறும் ஒரு நாடகமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஆனாலும், தற்போது பாகிஸ்தான் கொஞ்சம் பயந்து விட்டது போல் தான் தெரிகிறது எனவும், போரை நிறுத்த பாகிஸ்தான் கிட்டத்தட்ட கெஞ்சி வருகிறது என்றும் இரு நாட்டையும் கூர்ந்து கவனிக்கும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.