தென்காசி மாவட்டம், புளியரை எல்லை சோதனை சாவடியில் கனிம வளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு மேற்கொண்ட அதிரடி நள்ளிரவு ஆய்வு, கனிம கடத்தலை தடுப்பதில் அரசின் தீவிரமான முனைப்பை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.
நள்ளிரவு 1 மணி முதல் 2 மணி வரை நீடித்த இந்த திடீர் ஆய்வின்போது, கேரளா மாநிலத்திற்கு கனிமங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களின் இயக்கம் மற்றும் ஆவணங்கள் தீவிரமாக சரிபார்க்கப்பட்டன. பொதுமக்களின் நீண்டகால கோரிக்கைகளையும், கனிம கொள்ளை குறித்த புகார்களையும் கருத்தில் கொண்டு, அமைச்சர் நேரில் களமிறங்கி ஆய்வு செய்தது அப்பகுதி அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டிருந்த 18 சக்கர வாகனங்களை ஒவ்வொன்றாக ஆய்வு செய்த அமைச்சர், அவற்றின் பயண அனுமதிச் சீட்டுகளை உன்னிப்பாக சரிபார்த்தார். கனிம வளங்கள் சட்டபூர்வமாகவே கொண்டு செல்லப்படுகின்றனவா என்பதையும், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் கனிமங்கள் ஏற்றி செல்லப்படுகிறதா என்பதையும் உறுதி செய்ய அவர் முனைப்பு காட்டினார்.
குறிப்பாக, இரவு நேரங்களில் வாகனங்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதால், முறையான ஆவணங்கள் இன்றி எவ்வித வாகனமும் எல்லை தாண்டி செல்லக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். வாகனங்களில் கொண்டு செல்லப்படும் கனிமங்களின் எடையை கண்டறிய அங்கிருந்த எடை மேடையை அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள எடையும், வாகனத்தில் ஏற்றப்பட்டுள்ள கனிமங்களின் உண்மையான எடையும் சரியாக இருக்கிறதா என்பதை அவர் ஒப்பிட்டுப் பார்த்தார்.
18 சக்கர வாகனங்களில் சுமார் 54,000 கிலோ வரை கனிமங்கள் மற்றும் வாகனத்தின் மொத்த எடை இருந்ததை கண்டறிந்த அவர், எடை தொடர்பான விதிமுறைகளை எவ்வித சமரசமுமின்றி பின்பற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.ஆய்வின் ஒரு பகுதியாக, புளியரை சோதனை சாவடியில் பணியில் இருந்த காவல் துறையினரின் எண்ணிக்கை மற்றும் அவர்களது பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விசாரித்தார். கனிம கடத்தலை தடுக்க இரவு நேரங்களில் கூடுதல் கண்காணிப்பு அவசியம் என்பதை வலியுறுத்திய அவர், காவல்துறை மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகள் இணைந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
எவ்விதமான சட்டவிரோத செயல்களுக்கும் இடம் அளிக்காத வகையில் எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த அவர் வலியுறுத்தினார்.அரசின் விதிகளை மீறி கனிமங்களை கடத்தும் வாகனங்கள் மற்றும் அதற்கு காரணமான குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் இந்த ஆய்வின்போது எச்சரித்தார். அரசின் வருவாய்க்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும், விதிமீறல்களில் ஈடுபடும் குவாரிகள் உடனடியாக மூடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கனிம வளத்தை பாதுகாப்பதிலும், அரசுக்கு சேர வேண்டிய வருவாயை உறுதி செய்வதிலும் தமிழக அரசு மிக தெளிவாக இருப்பதை இந்த ஆய்வு உறுதிப்படுத்தியது.இந்த அதிரடி ஆய்வானது, கனிம கடத்தலைத் தடுப்பதில் அமைச்சர் டி.கே. பிரபு கொண்டுள்ள தீவிரமான ஆர்வத்தையும், பொறுப்புணர்வையும் பறைசாற்றியது. நீண்ட காலமாகப் பொதுமக்களால் எழுப்பப்பட்ட புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்த இந்த நள்ளிரவு ஆய்வு, எல்லைப் பகுதிகளில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்தது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
