வாய்ப்புகளை நழுவ விடாதீங்க… எண்ணங்களே உங்களுக்கு பூட்டு!

நமது வாழ்வில் தினமும் ஏதோ ஒரு வகையில் வாய்ப்புகள் நம்மைக் கடந்து சென்று கொண்டு தான் இருக்கிறது. அவற்றை இனம் கண்டு நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டியது நம் பொறுப்பு. சில நேரங்களில் வாய்ப்புகள்…

நமது வாழ்வில் தினமும் ஏதோ ஒரு வகையில் வாய்ப்புகள் நம்மைக் கடந்து சென்று கொண்டு தான் இருக்கிறது. அவற்றை இனம் கண்டு நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டியது நம் பொறுப்பு.

சில நேரங்களில் வாய்ப்புகள் ஒரு முறைக்கு மேல் கதவைத் தட்டுவது இல்லை. அப்படித் தட்டுகையில் பெரும்பாலோர் அந்த வாய்ப்புகளைத் தவற விட்டு புலம்பித் தீர்ப்பதை நாம் பார்க்கின்றோம். ஒரு சில வேளைகளில் காலம் நமக்கு இரண்டாம் வாய்ப்பைத் தருகிறது. அப்போதாவது அவற்றை கெட்டியாகப் பற்றிக் கொண்டு வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறப் பார்க்க வேண்டும்.

ஒரு ஊரில் ஒரு தலைசிறந்த மாயாஜாலக் கலைஞர் வாழ்ந்து வந்தார். அவருக்குத் தெரியாத மாயாஜாலக் கலைகளே கிடையாது. அவருடைய தனிச்சிறப்பு என்னவென்றால், எந்த ஒரு இடத்தில் அவரைப் பூட்டி வைத்தாலும், ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே அதில் இருந்து விடுபட்டு வெளி வந்து விடுவார். ஒருமுறை, அவருடைய கை-கால்களை விலங்கிட்டு, தண்ணீருக்குள் போட்டு அழுத்திய போது, லாவகமாக அதிலிருந்து சில மணித்துளிகளில் வெளிவந்தார்.

இன்னொரு முறை, ஒரு அறையில் அவரை அடைத்த போது, அவர் கூறியவாறு ஒரு மணி நேரத்திற்கு உள்ளாக அறைக் கதவைத் திறந்து வெளியே வந்தார். அவர் எப்படி இதனை செய்கிறார், என்ன யுத்திகளை மேற்கொள்கிறார் என்பது யாருக்கும் புரியாத புதிராகவே இருந்தது. அவர் வாழ்ந்து வந்த அதே ஊரில் உலகிலேயே மிகவும் கட்டுக்கோப்பான, யாரும் தப்பிக்கவே முடியாத சிறைச்சாலை ஒன்று இருந்தது.

இதுவரையில் அந்த சிறைச்சாலையில் இருந்து ஒருவர் கூட தப்பித்தது இல்லை என்னும் சான்று பெற்றது அந்த சிறைச்சாலை. இதனைக் கேள்விப்பட்ட அந்த மாயாஜாலக் கலைஞர், தன்னை அந்த சிறைச்சாலையில் அடைக்கும்படியும், ஒருமணி நேரத்தில் நான் வெளி வந்து என்னுடைய திறமையை உங்களுக்கு காட்டுகிறேன் என்றும், அறைக்கூவல் விடுத்தார்.

அதற்கு ஒப்புக் கொண்ட அந்நாட்டு அரசாங்கம் அவரை சிறைச்சாலையின் ஓர் அறையில் தள்ளி கதவை சாத்தியது. உள்ளே சென்ற அவர் முதலில் செய்ததாவது, தான் அணிந்து இருந்த இடுப்புப் பட்டையில் ஒளித்து வைத்து இருந்த ஒரு கம்பியை வெளியே எடுத்தார். பின்னர் அந்தக் கம்பியை வைத்து கதவில் இருந்து சற்றுத் தள்ளி இருக்கும் பூட்டைத் திறக்க முற்பட்டார்.அரை மணி நேரம் முயன்று பார்த்தார் முடியவில்லை. ஒரு மணி நேரம் முயன்று பார்த்தார் முடியவில்லை. இவ்வாறாகத் தொடர்ந்து 3 மணி நேரம் முயற்சி செய்தும், அவரால் பூட்டைத் திறக்க முடியவில்லை.

மிகவும் சோர்வுற்று எரிச்சலுடன் காணப்பட்ட அவர் அசதியில் அந்த கதவின் மீது சாய்ந்தார். கதவு தானாக திறந்தது.இதில் வேடிக்கை என்னவெனில் ? கதவு பூட்டப்படவே இல்லை. அவருடைய எண்ணங்களிலேயே கதவானது, பூட்டப்பட்டு இருந்தது. அதன் காரணமாகவே கண்டிப்பாக நம்மைப் பூட்டி இருப்பார்கள் என்று எண்ணி, பூட்டாத கதவைக் கம்பியை விட்டு திறக்க முயன்று கொண்டு இருந்தார்.

“நம்மில் பலர் எண்ணங்களிலேயே இவ்வுலகில் வாய்ப்புகள் இல்லை என்று பூட்டுப் போட்டுக் கொண்டு உள்ளதால், செய்வதறியாது திகைத்துக் கொண்டு இருக்கிறார்கள். வாழ்க்கையில் நமக்கான வாய்ப்புகள் இங்கு ஏராளம். அந்த வாய்ப்புகளைத் தேடி நாம் சென்றோம் என்றால் நமக்கான இடம் நிச்சயம் கிடைக்கும். பொறுமையைவிட மேலான தவம் இல்லை.திருப்தியை விட மேலான இன்பம் இல்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறம் இல்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதம் இல்லை…!