ஜோமாட்டோ நிறுவனம் தங்கள் 15 நிமிடங்களில் உணவு டெலிவரி செய்யும் ‘Quick’ சேவையை சைலண்ட் ஆக நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு, ஹைதராபாத், மும்பை மற்றும் குருகிராம் போன்ற மெட்ரோ நகரங்களில் ‘Quick’ சேவை சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது, நிறுவனம் தனது கவனத்தை Blinkit Bistro என்னும் மற்றொரு 10 நிமிட சேவையின் மீது திருப்பியுள்ளது. இந்த புதிய சேவையில் சிற்றுண்டிகள், பானங்கள் மற்றும் லைட் உணவுகள் மட்டும் வழங்கப்படும்.
ஜோமாட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீபிந்தர் கோயல், ‘Quick’ சேவையை பெரிதாக்க முடியாத நிலை ஏற்பட்டது என்று ஏற்கனவே கூறியிருந்தார். உணவக பார்ட்னர்கள் குறைவு தான் இந்த சேவை நிறுத்தப்பட்டதற்கு முக்கிய காரணங்களாகும். இதற்கு முன், Zomato Instant மற்றும் Zomato Everyday சேவைகளையும் நிறுவனம் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை பொருத்தவரை ‘Quick’ டெலிவரி சேவைகள் வளர்ந்து வருவது நேர்மறையாக இருந்தாலும், அதன் பின்னால் உள்ள பாதிப்புகள் குறித்து கவலை அதிகரிக்கிறது. கொல்கத்தாவில் ஒரு 35 வயது டெலிவரி பாய் வேகமாக ஓடிய வேளையில் லாரியை கடக்க முயற்சித்தபோது விபத்தில் பலியானார்.
பெங்களூருவில் மட்டும், ஒரு வாரத்தில் 17,000 டெலிவரி பாய்களுக்கு போலீசார் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். எனவே வேகம், விவேகமல்ல என்பதால் ‘Quick’ நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
முன்பு நாம் தான் கடைக்கு சென்று வாங்கினோம், இப்போது இரண்டு கிளிக்கில் பொருள் வீட்டுக்கு வந்து விடுகிறது. இது பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவிகரமாக உள்ளது. இதில் எதற்காக அவசரம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
20 ரூபாய் snacks-க்கு 3 அடுக்கு பிளாஸ்டிக் பை, ஒரு ரைடர் அவசரத்தில் உயிரிழப்பு, இது போல நிகழ்வுகள் அதிகரிக்கும்போது, வேகத்தைவிட பாதுகாப்பும், மனிதநேயமும் முக்கியம் என்பது உறுதி ஆகிறது. எனவே தான் ‘Quick’ சேவை நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.