ஒரு நீண்ட விமானப் பயணத்தில், தொடர்ந்து பல திரைப்படங்களை பார்த்து கொண்டிருக்கும் நேரத்தில், ஒரு சுவையான பாப்கார்ன் இருந்தால் நல்ல அனுபவமாக இருக்கும் என்று நினைத்திருக்கிறீர்களா? அந்த உங்கள் ஆசையை ஏர் இந்தியா இப்போது நனவாக்கி வருகிரது.
ஏர் இந்தியா மற்றும் இந்தியாவின் முன்னணி குர்மே பாப்கார்ன் பிராண்ட் 4700BC இணைந்து, சூடான சுவையான அதே இடத்திலேயே தயார் செய்யப்படும் பாப்கார்னை விமானத்தில் வழங்குவதன் மூலம் ஒரு புதிய சினிமா அனுபவத்தை பயணிகளுக்கு வழங்குகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச விமானங்களில், முதல் மற்றும் வணிக வகுப்பு பயணிகளுக்காக, திரையரங்க பாணியில் பாப்கார்ன் டப்பாக்களில், இச்சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியாவின் விமானங்களில் பாப்கார்ன் வழங்கும் சேவை ஆரம்பமாகவுள்ளது. இது வெறும் சிற்றுண்டிக்காக அல்ல, பயணத்தில் மகிழ்ச்சியான நினைவாக மாறும் அனுபவத்தை உருவாக்குவதே நோக்கம். இதை மேலும் சுவாரஸ்யமாக்க, பிரபல திரைப்பட விமர்சகர் ரஜீவ் மாசந்த் உடன் ஏர் இந்தியா கூட்டணி அமைத்துள்ளது.
பாப்கார்ன் பிரபலத்தையும், அது இப்போது நிலத்தில் மட்டும் இல்லாமல் வானில் கூட கிடைக்கிறது என்பதையும் அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவின் தேசிய கம்பெனி என அழைக்கப்படும் ஏர் இந்தியா, ஜெ.ஆர்.டி. டாடா தொடங்கி வைத்த இந்தியாவின் முதல் விமான நிறுவனம் ஆகும்.
உலக அளவிலான விருந்தோம்பல் தரத்தை நோக்கி நகரும் இந்த முயற்சி, எமிரேட்ஸ் போன்ற விமான நிறுவனங்களில் வழங்கப்படும் நுட்பமான உணவுகளுக்கு ஒத்த அனுபவங்களை, படிப்படியாக ஏர் இந்தியாவும் வழங்கும் நிலையில் அழைத்துச் செல்லும்.