இந்தப் பாட்டெல்லாம் இல்லாத சுதந்திர தினமா? நாடி நரம்பைத் தூண்டி தேச பக்தியை வளர்க்கும் பாடல்கள்

By John A

Published:

ஆங்கிலேயரிடமிருந்து மகாத்மா காந்திஜி அகிம்சை வழியில் நமது தாய்த் திருநாட்டிற்கு வாங்கிக் கொடுத்த சுதந்திரக் காற்றைத் தான் நாம் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதற்குப் பின்னால் எண்ணற்ற சுதந்திரப்போராட்ட வீரர்கள் சிந்திய இரத்தமும் தியாகமும் போற்றுதலுக்குரியது. இவ்வாறு நம் முன்னோர்கள் வாங்கிக் கொடுத்த சுதந்திரத்திற்குப் பின் எத்தனை வலிகள் இருந்தது என்பதை திரைப்படங்களும், வரலாறும் தான் நமக்கு உணர்த்துகிறது. இதனைப் பார்த்தே நாம் தேசபக்தியை வளர்த்துக் கொண்டோம் என்றால் அது மிகையாகாது.

அவ்வாறு தமிழ் சினிமாவில் சுதந்திரத்தைப் போற்றும் வகையிலும், தேச பக்தியை ஊட்டும் வகையிலும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சில பாடல்கள் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன. அப்படிப்பட்ட சில பாடல்களைப் பார்ப்போமா?

பாரத விலாஸ்
சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா நடிப்பில் வெளிவந்த பாரத விலாஸ் படத்தில் இடம்பெற்ற “இந்திய நாடு என் வீடு.. இந்தியன் என்பது என் பேரு..” வாலி இயற்றிய இப்பாடலுக்கு டிஎம்.எஸ் மற்றும் பி.சுசீலா குரல் கொடுக்க எம்.எஸ்.விஸ்வநாதன் இசையால் தேச பக்தியைத் தூண்டிவிட்டிருப்பார்.

கப்பலோட்டிய தமிழன்
ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து சிவாஜி நடித்த கப்பலோட்டிய தமிழன் படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களுமே தேச விடுதலை பெற்றதையும், தேசப் பற்றையும் வளர்க்கும் விதமாக ஒலிக்கும்.

குறிப்பாக பாரதியாரின் வரிகளில் உருவான வந்தே மாதரம் என்போம்.., என்று தணியும் இந்த சுதந்திர தாகம்.., பாருக்குள்ளே நல்ல நாடு.., வெள்ளிப் பனிமலையின் மீது உலவுவோம்… போன்ற பாடல்கள் காலத்தால் அழியாத தேசபக்தி கானங்களாக இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

ஒரு நடிகனாக எனக்கு கிடைத்த சிறந்த கதைக்களம் இந்தப்படம் தான்… நடிகர் சூரி பகிர்வு…

கைகொடுக்கும் தெய்வம்
இதிலும் சிவாஜி நடிப்பில் சிந்து நிதியின்மிசை நிலவினிலே என்ற பாடல் நாட்டின் இயற்கை வளத்தினைப் பறைசாற்றுவதாக விளங்கும்.

ஜெய்ஹிந்த்
அர்ஜுன் இயக்கி நடித்த ஜெய்ஹிந்த் படத்தில் இடம்பெற்ற தாயின் மணிக்கொடி.. தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த் என்ற பாடல் நாடி, நரம்பினைத் தூண்டி தேசபக்தியை ஊட்டும் பாடலாக விளங்குகிறது. வித்யாசாகர் இசையில், எஸ்.பி.பி-யின் குரலில் வைரமுத்துவின் வரிகளில் உருவான இப்பாடல் இளைஞர்களிடம் மிகப் பிரபலமாக இருக்கும் பாடலாக இருக்கிறது.

வந்தே மாதரம்
நாட்டின் 50-வது சுதந்திர தினத்தினைக் கொண்டாடும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மானால் இயக்கி, நடித்து, இசையமைக்கப்பட்ட ஆல்பம் தான் வந்தே மாதரம். ஏ.ஆர்.ரஹ்மான் குரல் இந்தியா முழுமைக்கும் ஒலித்து ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்குள்ளும் தேச பக்தியை ஊட்டியது வந்தே மாதரம் ஆல்பம். குறிப்பாக வந்தோ மாதரம் என உணர்ச்சி பொங்க ஏ.ஆர்.ரஹ்மான் பாடும் போது புல்லரிக்காமல் இருக்காது.

இப்படி ஒவ்வொரு சுதந்திரதினத்தன்றும் மேற்கண்ட பாடல்கள் ஒலிக்கத் தவறுவதில்லை.