ஆந்திர மாநிலத்தில் வரும் ஜூன் மாதம் நான்கு மாநிலங்களவை எம்.பி பதவிகள் காலியாகவுள்ள நிலையில், தென்னிந்திய அரசியலில் குறிப்பாக தமிழக பாஜகவில் ஒரு பெரிய மாற்றம் நிகழப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது காலியாகும் இடங்களில் மூன்று இடங்கள் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வசம் இருந்தவை என்றாலும், சட்டமன்றத்தில் அக்கட்சிக்கு போதிய பலம் இல்லாத காரணத்தால் அந்த இடங்களை பாஜக மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் கைப்பற்ற திட்டமிட்டுள்ளன.
இந்த சூழலில், டெல்லி பாஜக மேலிடம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளதாகவும், அதன்படி காலியாகும் ஒரு எம்.பி பதவியை அண்ணாமலைக்கு வழங்க ஆலோசனைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்துடன் அண்ணாமலைக்கு இருக்கும் நெருக்கம், அவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதில் எந்ச் சிக்கலையும் ஏற்படுத்தாது என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவி என்பது அண்ணாமலைக்கான ஒரு பெரிய பொறுப்பின் தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது. ஜூன் மாதம் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் போது, அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற பேச்சு பலமாக அடிபடுகிறது. இது நடந்தால், தமிழகத்தில் இருந்து மத்திய அமைச்சரவையில் இடம்பெறும் ஒரு முக்கியமான முகமாக அண்ணாமலை மாறுவார்.
மத்திய அமைச்சராக அதுவும் கேபினட் அமைச்சராக அண்ணாமலையின் வருகை தமிழக அரசியல் அதிகார மையத்தில் புதிய அதிர்வுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அண்ணாமலைக்கு டெல்லி மேலிடத்தின் ஆசி முழுமையாக இருப்பதாக கருதப்படுவதால், தமிழகத்தில் திமுக ஆட்சி ஏற்பட்டால் சுவாரஸ்யம் அதிகமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.
அதே சமயம், தற்போதைய மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் நிலை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. அவினாசி தொகுதியில் போட்டியிட்டுள்ள அவர் வெற்றி பெற்றுவிட்டால், தனது தற்போதைய அமைச்சர் மற்றும் எம்.பி பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஒருவேளை அவர் வெற்றி பெறவில்லை என்றாலும், மத்திய அமைச்சரவையில் இருந்து அவரை விடுவிக்க டெல்லி மேலிடம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் கசிகின்றன. அமித்ஷாவுக்கு எல்.முருகனின் செயல்பாடுகளில் பெரிய அளவில் திருப்தி இல்லை என்று சொல்லப்படுகிறது.
இருப்பினும், அண்ணாமலைக்கு வழங்கப்படவுள்ள இந்த அமைச்சர் பதவியை தடுப்பதற்கு பாஜகவிற்குள்ளேயே ஒரு குழு தீவிரமாக செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகரின் தலைமையில் இயங்கும் அந்தக் கும்பல், அண்ணாமலைக்கு டெல்லியில் செல்வாக்கு கிடைப்பதை தடுத்து நிறுத்த திட்டமிட்டு கறுவிக்கொண்டு இருப்பதாகத் தெரிகிறது. கட்சியின் உள்ளேயே இருக்கும் இத்தகைய எதிர்ப்புகளைச் சமாளித்து, அண்ணாமலை மாநிலங்களவை உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் உருவெடுப்பாரா என்பது ஜூன் மாதத்தில் தெரிந்துவிடும். தமிழக அரசியலில் இது ஒரு புதிய அத்தியாயமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
