திதிகளில் மிக முக்கியமானது அமாவாசை. அதிலும் ஆடி அமாவாசை பிரசித்திப் பெற்றது. அந்த அற்புதமான நாள் நாளை (24.7.2025) வருகிறது.
முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபட வேண்டிய முக்கியமான நாள் இது. பெற்றோர் இறந்து போனாலும் நாம் நல்லாருக்கணும்னு நமக்கு ஆசி தருபவர்கள் அவர்கள்தான். அதனால் நாம் முதலில் செய்ய வேண்டியது பித்ரு வழிபாடு. அதன்பிறகு தான் தெய்வ வழிபாட்டைச் செய்ய வேண்டும். நாம் மட்டும் அல்ல. தெய்வங்கள் கூட தர்ப்பணம் செய்துள்ளன. திருவண்ணாமலையில் எழுந்தருளி அருள்புரிபவர் அண்ணாமலையார். எல்லாருக்கும் தந்தையாக இருக்கும் நாதர். அவர் ஜோதியாக இருக்கக்கூடியவர்.
அவரை தன் குழந்தையாக ஏற்றுக் கொண்டவர் வள்ளால மகாராஜா. அவரது காலத்திற்குப் பிறகு இன்றைக்கும் மாசி மகாமகம் அன்று அண்ணாமலையார் வள்ளால மகாராஜாவுக்குத் தர்ப்பணம் செய்யக்கூடிய நிகழ்வு நடைபெறுகிறது. அதே போல எம்பெருமான் நாராயணன் ராம அவதாரம் எடுத்தபோது தன்னுடைய தந்தையாகிய தசரதருக்கு தர்ப்பணம் செய்ததாக ராமாயணத்தில் படித்திருக்கிறோம்.
தெய்வங்களே தர்ப்பணத்துக்கு அவ்ளோ முக்கியத்துவம் கொடுக்கும்போது நாம் எம்மாத்திரம் என்ற கேள்வி எழுகிறது. அதனால் அமாவாசை அன்று தவறாமல் தர்ப்பணம் செய்ய வேண்டும். அதிலும் ஆடி அமாவாசையில் தர்ப்பணம் செய்வது முக்கியமானது.
நாளை அதிகாலை 3.06மணிக்கு அமாவாசை ஆரம்பித்து மறுநாள் அதிகாலை 1.48 வரை இருக்கிறது. காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணிக்குள் தர்ப்பணம் செய்து விட வேண்டும். மதியம் 12 மணி முதல் 1.20 மணிக்குள் இலை போட்டு படையலிட வேண்டும். நாளை 2 பேருக்காவது அன்னதானம் செய்வது சிறப்பு. காகத்துக்கு உணவு வைக்க, பசுமாட்டுக்கு அகத்திக்கீரை கொடுக்க மறந்துடாதீங்க.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



