தேசியக் கொடியை ஏந்தி செல்வதால் அரசுக்கு என்ன பிரச்சனை.. பாஜக வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

By Keerthana

Published:

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தேசிய கொடியுடன் இரு சக்கர வாகனத்தில் பேரணி நடத்த அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்றம், வாகன பேரணிக்கு கட்சி கொடியை ஏந்தி செல்ல தடை விதிக்கப்படுகிறது என்றும் அவ்வாறு கட்சி கொடியை ஏந்தி சென்றால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது

சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தேசிய கொடியுடன் இரு சக்கர வாகனத்தில் பேரணி நடத்த காவல்துறை அனுமதி கோரி பாஜக கோவை மாவட்ட செயலாளர் கிருஷ்ண பிரசாத் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன்,ஏன் அனுமதி மறுக்கப்பட்டது என அரசின் விளக்கத்தை தெரிவிக்க உத்தரவிட்டார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தநிலையில், அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் , அரசியல் காரணங்களுக்காக மட்டுமே பேரணி நடத்தப்படுகிறது. பொதுநல நோக்கம் இல்லை. மேலும், தேசிய கொடி விதிகளின் படி கொடியை அவமதிக்க கூடாது.

கடந்த 2023 மத்திய உள்துறை அமைச்சகம் கொடியை கையாள்வது குறித்து வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது. குடியரசுத்தலைவர், பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள், நீதிபதிகள் தவிர மற்றவர்களின் வாகனங்களில் தேசிய கொடியை பயன்படுத்த கூடாது. பொதுமக்கள் வீடுகளில் கொடியை ஏற்றுவதற்கு தடை செய்ய முடியாது. பெரும்பாலான காவலர்கள் சுதிந்திர தின நிகழ்ச்சியில் இருப்பதால் பாதுகாப்பு வழங்க முடியாது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பாஜக சார்பில், இளைஞர்களிடையே சுதந்திர தினம் குறித்த விழிப்புணர்வுக்காக பேரணி நடத்தப்படுகிறது. சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகம் குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அரசுக்கு எதிராக எந்த கோசமும் எழுப்பப்படாது என தெரிவித்தது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், நடந்து செல்பவர்கள் கொடியை எடுத்து செல்ல தடை? சைக்கிளில் எடுத்து செல்ல தடை? இரு சக்கர வாகனத்தில் எடுத்து செல்ல தடை? தேசியக் கொடியை ஏந்தி செல்வதால் அரசுக்கு என்ன பிரச்சனை உள்ளது? என கேள்வி எழுப்பினார்.

மேலும், சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரன் தேசிய கொடியை கையில் ஏந்தி போராடினார். சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் கடந்த நிலையிலும் கொடியை எடுத்து செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுவது நீதிமன்றத்திற்கு அதிர்ச்சியாக உள்ளது. பேரணி செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் சாலையை காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும்.

தேசியக்கொடியை ஏந்தி செல்வதை தடுக்க கூடாது என காவல்துறை இயக்குநர் அறிவிக்க வேண்டும். கட்சி கொடியை ஏந்தி செல்ல தடை விதிக்கப்படுகிறது. அவ்வாறு கட்சி கொடியை ஏந்தி சென்றால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம். பேரணிக்கு காவல்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. எந்த பகுதியில் பேரணி நடத்தப்படுகிறது என தெரிவித்தால் மட்டும் போதும் என்ற நிபந்தனையின் படி பாஜக மோட்டார் சைக்கிள் பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.